Skip to main content

ராமஜெயம் வழக்கில் ஆதாரமான வெர்ஷா கார்; பிரபு கொலை குறித்து துருவும் போலீஸ் 

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Versha car as evidence in Ramajayam case; Police are on the lookout for Prabhu's incident

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது வரை விசாரணைகள் நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விசாரணை வளையத்திலிருந்த ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகரன். இவர் ஆம்புலன்ஸ்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் பிரபல ரவுடியாகவும் இவர் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அலுவலகத்தில் இருந்த பொழுது முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் வந்த கும்பல், பிரபுவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை தீவிரப் படுத்தப்பட்டு வரும் வேளையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை வளையத்தில் இருந்த ரவுடி பிரபு இன்று விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது திருச்சி மாநகரை பரபரப்பாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் பிரபுவை பற்றி போலீசார் விசாரித்ததில் திருடப்பட்ட கார்களை விற்று வந்தது தெரிய வந்தது. ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பது வெர்ஷா வகை கார். அந்த வெர்ஷா வகை காரை ஏற்கனவே பிரபாகரன் யாரிடமோ விற்றுள்ளார். இது தொடர்பாக பிரபுவிடம் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை,  கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபுவை இன்று விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி இருந்தது. பிரபுவிடம் இருந்து காரை வாங்கிய கும்பல் அவரை கொலை செய்திருக்கலாம் என யூகங்கள் கிளம்பி இருக்கும் நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் முழுமையாக விசாரித்த பின்னரே முழு தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.