'Vengaivayal case to be heard on March 11

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதி மனித கழிவு மிதந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். தொடர்ந்து, கடந்த ஜனவரி 20 ஆம் தேதி புதுக்கோட்டை தனி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், வதந்தியை பரப்பி மனிதக் கழிவை கலந்ததாக வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, அதே ஊரைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளதோடு மேலும் பல ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக சித்தரிக்கிறது சிபிசிஐடி என்று குற்றம்சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றத்திலும் இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளதால் தலித் வன்கொடுமை சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டனர்.

இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட வழக்கு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் இன்று 6 ந் தேதி வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு கோப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு அடுத்த விசாரணை மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் சிபிசிஐடி போலீசாரால்குற்றம்சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment