ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு தொடர்பாகத் தொடர்ந்து அவதூறு கருத்து - கேரள நடிகர்களுக்கு "ரெட் கார்டு" கேட்கும் வேல்முருகன்!

05:52 PM Oct 25, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, " கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தைப் பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களைத் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்திற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அம்மாவட்டங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றப்படுகிறது. 1970 ஆம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 140 மெகா வாட் மின்சாரத்தை தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்து வருகிறது. இச்சூழலில், கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், ஜோஜூ ஜார்ஜ், உன்னி முகுந்தன், சில அரசியல் கட்சிகள் இணையத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தின் வாயிலாக, முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக விஷம பிரச்சாரம் கட்டவிழ்க்க முயற்சி செய்யப்பட்டது. பின்னர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள், மக்கள் போராட்டங்கள் மூலம், அப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை பலமாக இருப்பதாக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு கூறியிருந்தாலும், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதில், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் மற்றும் இன்னும் பிற கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது. வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிகவும் வேதனைக்குரியது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் தயாராக இருக்கின்றனர். ஆனால், கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று மலையாள நடிகர்கள், சில அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வது நியாயமா?. முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை என்று மத்திய நீரியல் நிபுணர் குழு சொன்ன பிறகும், பிடிவாதமாக பொய்யான காரணங்களை கற்பித்து அணைக்கு ஆபத்து என்று கூறி உடைக்க வேண்டும் என்பது கண்டனத்துக்குரியது. இந்த அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் வாழ்வாதாரம் பறிபோகும்.

உணவுக்கு, பிழைப்புக்கு, வர்த்தகத்துக்கு என பல வழிகளிலும் சரி பாதி தமிழகத்தை மட்டுமே நம்பியுள்ள கேரளா, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, கேரளாவில் கடும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கூறி வரும் மலையாள நடிகர்களை தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட சங்கத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. மேலும், கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் உதவி செய்வதோடு, அம்மாநிலத்தில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரளா அரசுக்கு, தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT