வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தளங்களில் ஒன்று ஏலகிரி மலை. இந்த ஏலகிரி மலையில் பகலில் கூட ஓரளவு குளிர்ச்சியாகவே இருக்கும். அதேபோல் மாலை 04.00 மணியானால் கோடை காலத்திலேயே, பனிக்காலம் போல் குளிரும். இதனால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவார்கள். மலையை சுற்றிப்பார்க்க அதிக இடங்கள் இல்லையென்றாலும், அதன் குளுமையை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் வருவதால் நூற்றுக்கணக்கான விடுதிகள் இங்கு உள்ளன.

இதனால் புதுமண தம்பதிகளின் வருகையும், இங்கு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருமணமாகி 3 நாட்களே ஆன வாணியம்பாடி நகரம் பெருமாள்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், தனது மனைவி திவ்யாவுடன் இருசக்கர வாகனத்தில் செப்டம்பர் 5ந்தேதி அன்று காலை வேலூர் மாவட்டம், ஏலகிரிக்கு வந்துள்ளார்.

VELLORE YELAGIRI HILLS VISIT NEW COUPLE MANIKANDAN AND DIVYA BACK TO HOME TWO WHEELER INCIDENT

Advertisment

Advertisment

ஏலகிரி மலையை சுற்றி பார்த்துவிட்டு மாலை 05.00 மணியளவில் மலையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழே இறங்கியுள்ளார். மலையின் கொண்டை ஊசி வளைவான 9 வது வளைவு அருகே வரும்போது, தடுப்பு சுவர் மீது மோதி வாகனத்தோடு இருவரும் கீழே விழுந்தனர். இதில் கணவன் - மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

திவ்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார். அந்த வழியாக வந்த மக்கள் உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்களுக்கு முதலுதவி செய்துள்ளனர். அப்படியிருந்தும் திவ்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக மணிகண்டனை வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். திவ்யாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சோலையார்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.