Skip to main content

வதந்தியை நம்பி தாக்கியதில் மூதாட்டி பலி: தி.மலை, வேலூர் செல்ல பயப்படும் பக்தர்கள்

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
vellore, tiruvannamalai



திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த அத்திமூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், மலேசியாவைச் சேர்ந்த சந்திரசேகரன், அதே மலேசியாவைச் சேர்ந்த மோகன்குமார் (இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்), மயிலாப்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகிய 5 பேரும் டாடா இண்டிகா காரில் கோவிலுக்கு வந்தனர். 
 

அப்போது வழி தெரியாமல் அத்திமூரில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் முகவரி விசாரித்துள்ளனர். நீங்கள் வந்த வழியிலேயே அந்த கோவில் உள்ளது என கூறியுள்ளனர். வழி விசாரிக்கும்போது அங்கிருந்த சில குழந்தைகள் இவர்களது கார் அருகே ஓடிவர, ருக்குமணி என்ற பெண் காருக்குள் இருந்தபடியே குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பின்னர் காரும் புறப்பட்டு சென்றுவிட்டது. 
 

vellore, tiruvannamalai


 

அத்திமூர் கிராமத்திற்குள் இவர்களது கார் வந்தபோது, காரை மடக்கிய அந்த ஊரைச் சேர்ந்த சுமார் 20 பேர், குழந்தையை கடத்த வந்தவர்கள் நீங்கள்தானே என கேட்க, காருக்குள் இருந்தவர்களோ நாங்கள் கோவிலுக்கு வந்துள்ளோம் என கூறியுள்ளனர். இல்லை நீங்கள் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து கடத்த முயற்சித்திருக்கிறீர்கள் என கூறி  அவர்கள் அடிக்க துவங்கியுள்ளனர். 
 

குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என தகவல்கள் பரவ அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு வந்து முறையாக எதையும் விசாரிக்காமல் அவர்களும் அடித்து, உதைக்க துவங்கினர்.

இந்த தகவல் போளுர் காவல்நிலையத்திற்கு செல்ல அங்கிருந்து 2 எஸ்.எஸ்.ஐ.க்கள், 3 போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விலக்கிவிட்டு அவர்களை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் பொதுமக்கள் நிறுத்தாமல் அடித்து உதைத்துள்ளனர். 

 

vellore, tiruvannamalai


 

இறுதியில் 11.45 மணிக்கு போலீசார் அந்த 5 பேரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 12.10 மணி அளவில் 65 வயதான ருக்குமணி இறந்துள்ளார். கார் ஓட்டுநர் கஜேந்திரன், சந்திரசேகரன் இருவருக்கும் பலத்த காயம் என்பதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மோகன் குமார் மற்றும் வெங்கடேசன் இருவரையும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். கஜேந்திரன், சந்திரசேகர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

vellore, tiruvannamalai


 

தற்போது அந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். யார், யார் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என விசாரித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு வந்தவர்களை குழந்தைகள் கடத்த வந்தார்கள் என நினைத்து தாக்கியதில் ஒரு உயிர் பலியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து வந்தன. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என ஊருக்குள் வருபவர்களை எதுவும் விசாரிக்காமல் தாக்குகின்றனர்.

இதேபோன்று அண்மையில் வேலூர் பாகாயத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, குழந்தைகளை கடத்த வந்தவர்  என நினைத்து அடித்து உதைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அப்பாவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 

வேலூர் எஸ்.பி. பகலவன், சந்தேகம் என வந்தால் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுங்கள். அடித்து, உதைக்காதீர்கள் என கூறியிருந்தார். இதுபோன்ற சம்பவங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தவில்லை. இதனால் தற்போது ஒரு உயிர் பலியாகி உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்