பாலாற்றை சுரண்டி ஒருப்பக்கம் மணல் கொள்ளை நடத்துகிறார்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவினர். இதனை தடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, கணிமவளத்துறை கண்டும் காணாமல் கண் மூடிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் பாலாற்றில் உள்ள குவாரிகள் மூடப்பட்டதால் ஆற்றின் ஓரம் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஆழமாக தோண்டி மணலை எடுத்து அதை நீர்விட்டு கழுவி மணலாக்கி விற்பனை செய்கின்றனர். இதுப்பற்றி புகார் தந்தாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காக்கங்கரை என்கிற கிராம பகுதியில் செயற்கை மணல் உற்பத்தி நிலையங்கள் சட்டவிதிகளுக்கு முறையாக பலவும் செயல்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதுப்பற்றி அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் தந்தும் சில சமயம் நடவடிக்கை எடுப்பது, பல சமயம் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனர். அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருக்க நன்றாக கவனித்துவிடுகின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி 23ந்தேதி காலை கந்திலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செயற்கை மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீசார், 5 மணல் லாரி டிப்பர்கள் மற்றும் அதன் ஓட்டுநர்களை மணலுடன் பிடித்து கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்யச்சொல்லினர். அவர்களும் சரியென கூறியுள்ளனர். மதியம் 1 மணியளவில் ஓட்டுநர்கள் 5 பேரையும் காவல்நிலையத்தை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர் கந்திலி போலிஸார். டிப்பர் லாரிகள் மட்டும் கிக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.