Skip to main content

வேறு வேறு நம்பர் பிளேட்... மின்னலாக பறந்த மர்ம கார்... நள்ளிரவில் போலீஸ் சேஸிங்! நடந்தது என்ன? 

Published on 09/11/2019 | Edited on 15/11/2019

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வழியாக வியாழக்கிழமை (நவ. 7) இரவு 10 மணியளவில் ஒரு மர்ம கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் முன்பக்கமும், பின்பக்கத்திலும் வேறு வேறு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருந்து. 
 

diff num plate

 

 

அந்தப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர், காரில் பொருத்தப்பட்டிருந்த போலி நம்பர் பிளேட்டை கவனித்து விட்டனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில், அந்த காரை துரத்தத் தொடங்கினர். 

இதுகுறித்து மத்தூர் காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், கன்னந்தள்ளி பகுதியில் முதல்நிலை காவலர் செல்வம் மற்றும் காவல்துறையினர் தடுப்பு கம்பிகளை அமைத்தனர். அந்த வழியாக வந்த மர்ம கார், தடுப்புக்கம்பிகளை இடித்துத் தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தது. முதல்நிலைக் காவலர் செல்வம் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்ட காவல்துறையினர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாம்பல்பட்டி காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாம்பல்பட்டி ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழ், சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி தடுப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த வழியாக சென்ற மர்ம கார், லாரி தடுப்புகளைக் கடந்து மேற்கொண்டு செல்ல முடியாததால் அங்கேயே நின்றது. 
 

seized car

 

 

அதற்குள் அங்கு விரைந்த காவல்துறையினர் மர்ம காரை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். திருப்பத்தூர் அண்ணாநகரை சேர்ந்த அருண் (28) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அந்த காரில் இருப்பது தெரிய வந்தது. 

காருக்குள் ஒரு மூட்டையில் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும், திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு அந்த அரிசியை கடத்திச்செல்வதும் தெரிய வந்தது. காவல்துறையினர் துரத்தி வந்ததால் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில், காரை வேகமாக ஓட்டிச்சென்றதாக அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேறு வேறு நம்பர் பிளேட், வேகமாக சென்ற மர்ம கார் என ஏதோ பெரிய அளவில் கடத்தல் பொருளோ அல்லது பெருங்குற்றச் சம்பவமாகவோ இருக்கலாம் எனக் கருதிய காவல்துறையினருக்கு, வெறும் 800 கிலோ ரேஷன் அரிசிதான் என்பதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.