Skip to main content

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை வீசி சென்ற தாய்!!! 

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
vellore katpadi


 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து உள்ளது சேர்க்காடு கிராமம். பல கிராமங்களின் மையப் பகுதி என்பதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அதோடு அங்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இருக்கும்.
 

சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து ஜீன் 12ந் தேதி மாலை ஒரு குழந்தையின் அழுகுரல் நீண்ட நேரமாக கேட்டது. அந்த பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டுயிருந்த இளைஞர்கள் மற்றும் சிறுபிள்ளைகளின் காதுகளில் அந்த சத்தம் விழ, எங்கிருந்து சத்தம் வருகிறது என பார்க்க தேடியுள்ளனர்.
 

ஒரு வகுப்பறையின் படிக்கட்டில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அங்கு அழுதுகொண்டிருப்பதை கண்டனர். அதன் அருகில் யாருமில்லை. யாரோ வீசி சென்றுள்ளார்கள் என்பதை அறிந்துக்கொண்டனர் இளைஞர்கள். இதுக்குறித்து காவல்துறைக்கு தகவல் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

அதற்குள் இந்த தகவல் காட்டு தீயாய் பரவ நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு வந்து அந்த குழந்தையை பார்த்துள்ளனர். அழகாய், கண் கூட திறக்காமல் அழுத அந்த குழந்தைக்கு அங்கிருந்த பெண்கள் தூக்கி சமாதானம் செய்துள்ளனர். அங்கு வந்த திருவலம் போலீசார், குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தந்தனர். அவர்கள் வந்து குழந்தையை பெற்று சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
 

குழந்தை வீசி சென்றது தொடர்பாக திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய், அவரது குடும்பம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலிஸார்.

 

 

 

சார்ந்த செய்திகள்