Skip to main content

கட்டணம் கட்டாததால் அவமானப்படுத்திய பள்ளி, கட்டணத்தை தந்து உதவிய காங்கிரஸ் பிரமுகர்.

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் வாணி டெக் என்கிற தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் கட்டாததால் 10 ஆம் வகுப்பு மாணவியை கடந்த 3 நாட்களாக வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்து கொடுமைப்படுத்தியது பள்ளி நிர்வாகம். அக்டோபர் 22ந்தேதி மதியம் அம்மாணவி பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்தார். அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது பெற்றோர். இந்த தகவல் வாணியம்பாடியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

vellore incident


இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா, அம்மாணவியிடமும், குடும்பத்தாரிடம் விசாரித்தார். அவர்கள், 10ஆம் வகுப்பு மாணவி காயத்ரி இவ்வாண்டுக்கான கட்டணம் 45000 ஆயிரம்  ரூபாயில் 9000 ஆயிரம்  ரூபாய் மட்டுமே கட்டியதாகவும். மீதி பணம் இன்னும் கட்டவில்லை என்றதால் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்பா டிரைவரா இருக்கறார், வருமானம் சரியா இல்லை இன்னும் சில தினங்களில் கட்டிவிடுகிறேன் எனச்சொன்னார். அதனை பள்ளியில் சொன்னேன் அவர்கள் கேட்கவில்லை என்றார்.

அதனை கேட்டு வருத்தமடைந்த அஸ்லம்பாஷா, காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைதுறையின் சார்பாக தனது நிதி மற்றும் நண்பர்களிடம் நிதி வாங்கி 30 ஆயிரத்துக்கு காசோலையை தந்து பள்ளியில் கட்டணத்தை செலுத்திவிட சொன்னார்.  நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்திவிட்டு, வேறு உதவிகள் வேண்டுமானால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள் எனச்சொல்லி நம்பிக்கை தந்துவிட்டு வந்துள்ளார்.


இதுப்பற்றி அஸ்லம்பாஷாவிடம் பேசியபோது, "சரியாக படிக்காத பிள்ளைகளை, தாமதமாக வரும் பிள்ளைகளை வெளியே நிறுத்தி வைப்பதை கேள்விப்பட்டுள்ளோம், கட்டணம் செலுத்தவில்லையென வகுப்பறைக்கு வெளியே நிறுத்திவைத்து அவமானப்படுத்துவதை இப்போதுதான் காண்கிறேன். இது கண்டிக்கதக்கது. அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுப்போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெற்றால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும், அப்படி செய்யவில்லையெனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.