Skip to main content

நாட்டாமை இல்லாததால் நின்றுபோன திருமணம்!

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Vellore hill village, marriages are stopped because of nattamai

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி, கோயில் விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும், ஊரான் (நாட்டாமை) ஆக இருப்பவர் முடிவு செய்து தேதி கூறிய பிறகு தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதேபோல், ஊரான் வந்து தாலி எடுத்துக் கொடுத்த பிறகே திருமணம் நடக்கும் வழக்கம் இருக்கிறது. 

 

இந்நிலையில், வெள்ளக்கல் மலைக்கு ஊரானாக சேகர் என்ற சங்கர்(39) இருந்து வந்தார். இவரது அண்ணன் மகன் வசந்த் என்பவருக்கும், ஜமுனா முத்தூர் அருகே உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை வெள்ளக்கல் மலையில் உள்ள மணமகன் வீட்டில் திருணம் நடைபெற இருந்தது. எனவே, இந்தத் திருமணத்தில் தாலி எடுப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி ஊரான் சேகர் மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஊசூருக்கு வந்தனர்.

 

பின்னர் சிவநாதபுரம் மலையடிவாரம் வரும்போது, அங்கிருந்த வேலூர் எஸ்பி தனிப்படை போலீசார் சாராயம் விற்பது தொடர்பாக சேகரை மடக்கி விசாரணைக்காக அரியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சாராய வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் காவல் நிலையத்திற்குச் சென்று சேகரை விடுவிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரை விடுவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில், அந்த கிராமத்தில் ஊரான் கைது செய்யப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்ட நிகழ்வு இதுவே முதல்முறையென மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். மணமகனுக்கு சித்தப்பாவும் அந்த கிராமத்திற்கு ஊரானாகவும் இருந்து தாலி எடுத்துக் கொடுக்க வேண்டியவர் கைது செய்யப்பட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அத்தியூர் மலைக் கிராமங்களைப் பொறுத்தவரையில் ஊரானாக நியமிக்கப்படுபவர் தாலி எடுத்துக் கொடுத்த பிறகே திருமண நிகழ்வு நடந்து வருகிறது. தற்போது, வெள்ளக்கல் மலையின் ஊரான் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால், அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளார். மேலும், வேறு ஒருவர் புதிதாக ஊரானாக நியமிக்கப்படும் வரை அந்த கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்காது.

 

தற்போது நிறுத்தப்பட்ட இவர்களது திருமணமும் புதிய நாட்டாமை வரும் வரை நடத்தமாட்டார்கள். ஊரானாக மீண்டும் இவரோ அல்லது வேறு ஒருவரோ வருவது என்றால் 18 நாட்டாமைகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்ட பிறகு தான் ஊரானாகச் செயல்பட முடியும் என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.