Skip to main content

    கணவன், குழந்தையை கொன்று புதைத்த இளம்பெண்!  பின்னணியை துருவும் போலிஸ்

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் 25 வயதான ராஜா. எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.  சிறிய அளவில் வேலைகள் எடுத்தும் செய்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த மற்றொரு சாதியை சேர்ந்த தீபிகாவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒராண்டுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பிரனீஷ் என பெயரிட்டனர். 

 

m

 

கடந்த மே13ம் தேதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் தீபிகா மே 16ந்தேதி காலை புகார் அளித்தார். புகாரை வாங்கிய போலிஸார், உடனடியாக விசாரணையை தொடங்கினார். தீபிகாவிடம், கணவரின் நடவடிக்கை, அவரது குடும்பம், எதிரிகள் - நண்பர்கள் குறித்து தகவல்களை கேட்டனர். அப்போது, உன் கணவரின் செல்போன் எண் தா என கேட்டுள்ளனர். அவர் செல்போன் எடுத்து செல்லவில்லை, வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார் எனச்சொல்லியுள்ளார். 

 

நம்பரை தாம்மா அதில் ஏதாவது மிரட்டல் கால் வந்துள்ளதா என பார்க்கலாம், அப்படியே செல்போன் கொண்டு வா எனச்சொன்னபோது தயங்கியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலிஸார் தீபிகாவிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் அவர் கூறியதாக போலிஸ் தரப்பில் கூறப்படுவது; 

கணவர் ராஜா மற்றும் ஒரு வயது குழந்தை பிரனீசை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள சாத்தூர் ஏரிக்கரையில் புதைத்துவிட்டதாக தீபிகா கூறினார். புதைத்த இடம் என்று கூறி ஒரு இடத்தையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனே ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கலைசெல்வனிடம் தகவல் கூற, அவர் வந்து விசாரணை நடத்தியுள்ளார். 

 

ராஜா - தீபிகா காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ராஜா நாள்தோறும் குடித்துவிட்டுவந்து சித்திரவதை செய்ததாகவும், இதனால் வேறு வழியின்றி கொலை செய்ததாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. கணவனை கொலை செய்த பிறகு, கொலையாளியின் பிள்ளை என பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தையையும் கொலை செய்ததாக தீபிகா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

கொலைக்கான காரணம் நம்பும்படியாக இருந்தாலும், கொலை எப்படி செய்தார் ?, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ?, வீடு அமைந்துள்ள பகுதிக்கும் உடல் புதைக்கப்பட்ட பகுதிக்கும் இடையே உள்ள தூரம் 1 கி.மீ. இவ்வளவு தூரம் உடலை கொண்டு சென்றது எப்படி என விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு, இந்த கொலையை தீபிகா மட்டும் தனியே செய்ததற்கான வாய்ப்புகள் குறைவு என கருதும் போலிஸார் அதுப்பற்றியும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

 

உடல்களை புதைத்ததாக தீபிகா கூறிய இடத்தில் இருந்து துர்நாற்றம் வரும் நிலையில், அங்கு தோண்டிப் பார்க்க போலீசார் முடிவுசெய்து, இதுப்பற்றி வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காடு வட்டாட்சியர் சம்பவ இடத்தில் மே 17ந்தேதி காலை விசாரணை மேற்கொண்டபின், அப்பகுதியை தோண்ட அனுமதி தந்துள்ளார். காவல்துறையின் தடயவியல் வல்லுநர்கள் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவக் குழு வந்து பிரேதபரிசோதனை நடத்தி முடித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்த அதிகாரிகள்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Officials watched the recipe video at the Farmers Grievance Meeting

 

வேலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர் செல்போனில் சமையல் குறிப்பு பார்த்துக் கொண்டிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, அது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்திருந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் சீரியசாக நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர் செல்போனில் யூடியூபில் சமையல் குறிப்பு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

காவலரை பிளேடால் தாக்கிய இளைஞர்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

vellore district, gudiyatham police incident

 

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் ஜோதிமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நவீன். இவர் அக்டோபர் 1- ஆம் தேதி இரவு குடித்துவிட்டு, அந்த பகுதி பொதுமக்களிடம் தகராறு செய்துக்கொண்டு இருந்துள்ளார். இதுதொடர்பாக, அப்பகுதி கடைக்காரர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

 

அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் இருந்து அருள்கண்மணி என்கிற காவலர் வந்துள்ளார். அங்கு பைக்கில் வந்த அருள்கண்மணி, நவீனிடம் “ஏய் பிரச்சனை செய்யாம வீட்டுக்கு போடா” எனச்சொல்லியுள்ளார். “நீ என்னடா என்னை போடான்னு சொல்றது” என காவலரிடம் தகராறு செய்ய, அப்போ ஸ்டேஷனுக்கு வா என இழுத்துள்ளார்.

 

என்னையே ஸ்டேஷனுக்கு கூப்பிடறயா எனச்சொல்லி பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடு எடுத்த நவீன், காவலர் அருள்கண்மணியை நோக்கி வீச, அது காவலர் இடது கன்னத்தைக் கிழித்து ரத்தம் வந்தது. பிளேடு கிழித்த வலியால் அருள் துடிக்க துவங்கினார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிர்ச்சியாகி அதனை பார்த்து நின்றுள்ளனர்.

 

என்னை இன்னோரு முறை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டிங்கன்னா இதான் நிலைமை என எச்சரித்துவிட்டு அங்கிருந்து போயுள்ளான். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் காவலரை, மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இந்த தகவல் குடியாத்தம் காவல்நிலைய அதிகாரிகளுக்கு செல்ல அதிர்ச்சியாகியுள்ளனர். உயர் அதிகாரிகள் தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி, பொது இடத்தில் போலீஸ் மீது கைவைச்சவனை இன்னுமா அரஸ்ட் செய்யவில்லை எனக்கேட்க, இரவோடு இரவாக நவீனை காவல் நிலையத்துக்கு தூக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.