வேலூர் மாநகரில் ஆசியாவில் புகழ் பெற்ற கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் 'உங்கள் மகன் படிக்க மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக'க் கூறி, செங்கல்பட்டு மாவட்டம் காரணிப்பாக்கம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம், 2017 ஆம் ஆண்டு ரூ.57 லட்சம் பணத்தை சாய்நாதபுரத்தில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றும் சாது சத்தியராஜ், தமிழக முன்னேற்றக் கழகத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் தேவா, அவரது தம்பி அன்புகிராங்க் ஆகிய மூவரும் பெற்றுள்ளனர்.
பணம் பெற்றவர்கள் இதுவரையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததுடன் பணத்தைத் திருப்பித் தரமறுத்துள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகார் மீதான விசாரணையில் தேவா, சத்தியராஜ், அன்புகிராக் ஆகிய 3 மூன்று பேரும் பணம் வாங்கியது, மிரட்டியது உண்மை எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். தேவா மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் அவர் லைசென்ஸ் பெறாமல் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பாதிரியார் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.