சென்னை வேளச்சேரி பகுதியில் நேற்று (07.02.2025) இரவு பெண்மணி ஒருவர் தனது 7 மாதக் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கு வந்த தெருநாய் ஒன்று மூதாட்டி ஒருவரைக் கடிக்கப் பாய்ந்துள்ளது. இதனைக்கண்ட அந்த பெண்மணி நாயை விரட்டியுள்ளார். அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக அந்த தெரு நாய் 7 மாதக் குழந்தையைக் கடித்தது. அதுமட்டுமின்றி குழந்தையையும் கவ்விச் சென்றுள்ளது. இதில் குழந்தையின் தொடையில் காயம் ஏற்பட்டது.
அதன் பின்னர் குழந்தை மீட்கப்பட்டது. அதோடு இந்த தெரு நாய் அருகில் இருக்கும் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனையும் கடித்துள்ளது. மேலும் அதே சமயம் 7 பேரையும் நாய் கடித்துக் குதறி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்த தெருநாய்களைப் பிடித்துச் சென்றனர். சென்னையில் 7 மாதக் குழந்தையைத் தெருநாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சுற்றித்திறியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அங்கிருந்து தெருநாய்களை முற்றிலும் அகற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.