Vel yatra case filed on 135 people

பா.ஜ.க. நடத்திய வேல் யாத்திரையின்போது, பொது மக்களுக்கு 'கரோனா தொற்று' பரப்பியது போன்ற குற்றங்களுக்காக, 135 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கரோனா பரவல் குறையும் வரை, தமிழகத்தில் எந்த ஆர்ப்பாட்டத்துக்கும், போராட்டத்துக்கும், ஊர்வலங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என, காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் ஆர்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு எதிராக வாராகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், காவல்துறை டி.ஜி.பி. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்காதபோதும், நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரையை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் அனுமதி பெறாமல், பாஜக வேல் யாத்திரை நடத்தியது, பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரப்ப காரணமாக இருந்தது. பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, காவல்துறையினரிடம் தவறாக நடந்துகொண்டது, சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தது போன்ற குற்றங்களுக்காக, இதுவரை பாஜகவினர் 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம், தமிழகத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதாக, இதுவரை 1,241 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.