Skip to main content

“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” - டி.ஐ.ஜி. எச்சரிக்கை!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

"Vehicles will be confiscated if they turn around in violation of the curfew." - DIG

 

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டு, வெள்ளை விநாயகர் கோயில், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், பழனி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

 

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் டி.ஐ.ஜி. முத்துச்சாமி பேசும்போது, “கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் தீவிரமாக அமல்படுத்தப் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தக் கூடாது, மருத்துவமனைகள், மருந்தகங்கள், கால்நடை மருந்துகள், நாட்டு மருந்து கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் தவிர மற்ற எந்தக் கடைகளும் நிறுவனங்களும் செயல்படாமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும். 

 

மருத்துவ காரணம், இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இதனை போலீசார் சோதனை செய்த பின்னரே அவர்களை நகருக்குள் அனுமதிக்க வேண்டும். அதுபோல் குடிநீர் விநியோகம், பத்திரிகை விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் வேளாண்விளை பொருட்கள் விற்பனையைத் தடுக்கக் கூடாது. சரக்கு வாகனங்களைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும். ஓட்டல்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், மதியம் 12 மணிமுதல் 3 மணிவரையும் இரவு 6 மணிமுதல் 9 மணிவரை மட்டுமே உணவுப் பொருட்கள் பார்சலில் வழங்க போலீசார் அனுமதிக்க வேண்டும். ஊரடங்கை மீறி சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.