கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து சுமார் மூன்று மாதகாலமாக ஊரடங்கு சில தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் அமலில் இருக்கிறது.
சென்னையில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப் பதியப்படுவதோடு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கின் கடைசி நாளான நேற்று (30.06.2020) உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் பொது முடக்கம் ஜூலை 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ஜூலை 05 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்பக் கிடைப்பதில் குழப்பம் நிலவுகிறது. மேலும், சென்னை நகர் முழுவதும் ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சாலை ஓரங்களிலும், சந்திப்புகளிலும் குறைந்தபட்ச பாதுகாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வாகன உரிமையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.