Vehicle rally in Erode district ..!

Advertisment

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் வாகனப் பேரணி நடத்தினார்கள்.

சென்னிமலையில் விவசாயிகள், தேசியக் கொடிகளுடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் சென்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 26ஆம் தேதி காலை 10 மணி முதல் சென்னிமலை - காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே தேசியக் கொடிகளுடன் விவசாயிகள் மற்றும் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.

அப்போது, அங்கு வந்த போலீசார், கிராமப்புறங்கள் வழியாக இருசக்கர வாகன ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்தனர். இதனால் விவசாயிகள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், சண்முகம் ஆகியோர் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதனையடுத்து, விவசாயிகள் தேசியக் கொடிகளுடன் இருசக்கர வாகனங்களில் பஸ் நிலையம் வழியாக குமரன் சதுக்கம் சென்று அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில்,டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் பேசி கோஷங்கள் எழுப்பினார்கள். அதேபோல் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, சிவகிரி ஆகிய மாவட்டத்தின் பல ஊர்களிலும் வாகனப் பேரணி நடந்தது.