Skip to main content

பகலில் காய்கறி விற்பனை! இரவில் திருட்டுத் தொழில்! 

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Vegetable sales during the day! Theft at night!


பகலில் காய்கறி விற்பனை செய்வதுபோல் வீடுகளை நோட்டமிட்டுவிட்டு இரவு நேரங்களில் திருடும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் திருட்டுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் தொடர்ச்சியாக மாடுகள் திருடு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான போலீசார் விருத்தாசலம் ஜங்சன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது டாட்டா ஏசி வாகனத்தில், மாடுகளை ஏற்றி வந்த நபர்களை விசாரணை செய்ததில், முன்னுக்குப்பின் முரணாகக் கூறியதால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர். அவ்விசாரணையில் அவர்கள் இருவரும் வடலூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன், ராமச்சந்திரன் என்பதும் பகலில் காய்கறி விற்பனை செய்வதுபோல் வீடுகளை நோட்டம் விட்டு, இரவில் மாடுகளை திருடுகிறவர்கள் என்பது தெரியவந்தது.

 

மேலும்  விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களைத் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ்  வாகனம்  மற்றும் ரூ. 97 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு மாடுகளையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய குற்றப்பிரிவைச் சேர்ந்த சரவணன், செல்வகுமார், சௌமியன், தினேஷ், செல்வகுமார் உள்ளிட்டோருக்கு காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.