Skip to main content

பலத்த மழை முன்னெச்சரிக்கையாக வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

veeranam river water

 

 

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 586 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு தொடர்ந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

 

நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றும், கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரியில் தண்ணீரை குறைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தற்போது வீராணம் ஏரியின் நீர் மட்டம் 44.85 அடி உள்ளது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 2,000 கன அடியும், காட்டாறுகள் மூலம் விநாடிக்கு 150 கன அடியும் தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியின் வடிகால் மதகான வி.என்.எஸ்.எஸ். வழியாக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு விநாடிக்கு 50 கன அடியும் விவசாய பாசனத்துக்கு விநாடிக்கு 10 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

 

வீராணம் ஏரியின் வடிகால் மதகான வி.என்.எஸ்.எஸ். வழியா தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளாற்றில் ஏரி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பலத்த மழை பெய்தாலும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள அபாயம் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

கீழணை, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் கொண்ட குழுவினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னைக்குத் தண்ணீர் அனுப்பத் தடை!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Veeranam Lake dried up without water supply, so forbidden to send water Chennai

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரம் இதுவே ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரிக்கு மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை கீழணையில் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளாக அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்தடையும். இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 71 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி வறண்டு குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. அதாவது நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிட மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கோடையை சமாளிக்க சென்னைக்கு என்எல்சி சுரங்க நீரை வாலாஜா ஏரியில் எடுக்கவும், வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களில் தண்ணீர் எடுக்கவும், நெய்வேலி சுரங்க நீரை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கவும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Next Story

வீராணம் ஏரியில் நச்சுக்கலப்பா? அதிகாரிகள் விளக்கம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Officials have explained that there is no bad liquid in Veeranam Lake

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டப்பகுதிகளில் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த ஏரியில் நச்சு கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கடந்த 2018-19 ஆண்டில் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுகள் இருக்க கூடாது என உலக சுகாதார மையம் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் வீராணம் ஏரியில் 1 லிட்டர் நீரில் 17.72 மைக்ரோகிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபனிடம் கேட்டபோது, “வீராணம் ஏரியை சுற்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை, நச்சுகழிவுகள் கலக்க வாய்ப்பில்லை. இவர்கள் தண்ணீர் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துள்ளார்களா? என்று தெரியவில்லை. தற்போது வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் நல்ல முறையில் உள்ளது. இதனை விவசாயத்திற்கு அளித்து வருகிறோம். தண்ணீர் குறித்த ஆய்வை நாங்கள் மேற்கொள்ள முடியாது” என்றார்.

இந்த தகவல் குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் செயற்பொறியாளர் ராம்ஜியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு முறையும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும்போது தண்ணீரை பலமுறைகளில் சுத்திகரித்து அனுப்பி வருகிறோம். வீராணம் ஏரியில் எந்த ஒரு நச்சும் இல்லை. எனவே தண்ணீரை சோதனை செய்து தான் எடுக்கிறோம்” என்றார்.

அதேபோல் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவிப்பொறியாளர் அனந்தராயன் கூறுகையில், “வீராணம் ஏரியை சுற்றி எந்த நச்சு கழிவுகள் கலக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த தகவல் வெளிவந்த பிறகு பொதுமக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை சாம்பிளுக்கு எடுத்துச் சென்று ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம். ஆய்வகத்தில் இருந்து ரிசல்ட் வந்தவுடன் இதுகுறித்து முழுத்தகவலும் வெளியிடப்படும்” என்றார்.

வீராணம் ஏரியில் நச்சு உள்ளது என்ற தகவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை விரைவில் மாவட்ட நிர்வாகம் கலைய செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.