Skip to main content

நிரம்பிய வீராணம் ஏரி... நிம்மதியில் விவசாயிகள்...

Published on 01/12/2019 | Edited on 01/12/2019

கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி ஆகும். இது 16 கி.மீ நீளமும், 6 கி.மீ அகலமும் 48 கி.மீ சுற்றளவு கொண்டதாக உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது. இதன் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

 

veeranam lake filled...

 

இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரிக்கு மேற்கு பகுதியிலும் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் கீழணையிலிருந்து வடவாறு வழியாகவும், கரவாட்டு ஓடை, செங்கால் ஓடை வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்பொழுது ஏரியின் நீர்மட்டம் 47.30 அடியாக உள்ளது.  இதன் முழு கொள்ளளவு 47.5 அடியாகும். 

இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், கீழணை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர்கள் ஞானசேகர், வெற்றிவேல் ஆகியோர் விரைந்து வந்து வீராணம் ஏரியை பார்வையிட்டனர். இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 1,500 கனஅடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. வீராணம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி நிரம்பியதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள விவசாயிகள் நிம்பதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு நெற்பயிர்கள் பூ வைக்கும் நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.