Skip to main content

'இனியும் மோடி, அமித்ஷாவின் மாயாஜாலத்திற்கு இறையாக மாட்டார்கள்'-திருமாவளவன் பேச்சு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vck Thirumavalavan speech

ஜனவரி 26 வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''இந்த மாநாட்டில் முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் சீதாராம் எச்சூரி, ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேருரை ஆற்ற உள்ளனர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார முதல் புள்ளியாக இது அமையும் என நம்புகிறேன். வெல்லும் ஜனநாயகம் என்றால் வெல்லும் இந்தியா கூட்டணி என பொருள். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுகிறோம்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான நாடாளுமன்ற தேர்தல் அல்ல. இது இறுதி யுத்தம். ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு. இறுதி போராகவே இதனை கருதுகிறது விசிக. இந்த இறுதி போரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாரதிய ஜனதாவை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறியும். அதற்கான ஒரு அச்சாரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாடு நடைபெறும்.

பில்கிஸ் பானு வழக்கில் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளியாகி இருப்பது மிகுந்த ஆறுதலை தருகிறது. பாதிக்கப்பட்ட அம்மையாரின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத் உயர் நீதிமன்றத்தால் அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அரசியல் அமைப்புச் சட்டத்தை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து மோசடி செய்திருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் எத்தகைய கொடூரத்தையும் செய்துவிட்டு தப்பிவிட முடியும் என பில்கிஸ் பானு தீர்ப்பின் போது கருதப்பட்டது. ஆனால் அவர்கள் தப்ப முடியாது மீண்டும் சிறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நமக்கான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். பில்கிஸ் பானு குடும்பத்தினரை கொடுமையான வன்முறைக்கு உள்ளாக்கி குற்றச் செயலில் ஈடுபட்ட 11 பேரும் தண்டிக்கப்பட வேண்டும் விரைவில் சிறை படுத்தப்பட வேண்டும்.

மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாய மாளவித்தைகளுக்கு மக்கள் இனி மயங்க மாட்டார்கள், ஏமாற மாட்டார்கள். பத்தாண்டு காலம் நரக வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். பிஜேபியால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் தான். ஆக இனியும் மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாயாஜால வித்தைகளுக்கு இறையாக மாட்டார்கள் என நம்புகிறோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் இவிஎம் முறையை பயன்படுத்த கூடாது. ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். ஓட்டுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் சங்பரிவார அமைப்புகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இனி எந்த காலத்திலும் அவர்கள் தேர்தல் களத்தில் அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்.

அதனால்தான் அண்மையில் விசிக சார்பில் வேண்டாம் இ.வி.எம் வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இது இந்தியா முழுமைக்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டிய கோரிக்கை. ஆகவே இதை இந்தியா கூட்டணி பெருமளவில் மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கும். 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை தொழிற்சங்க தலைவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கனிவாக கேட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை நாள் என்பதால் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாஜக தரப்பினர் மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற உதிரி கட்சிகள் தொடர்ந்து இந்திய கூட்டணி குறித்த கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இது இந்தியா கூட்டணி மீது அவர்களுக்கு உள்ள அச்சத்தை காட்டுகிறது. இந்தியக் கூட்டணியில் சிறு சிறு முரண்பாடுகள் உள்ளது தான். பல மாநில கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டணியில் முரண்பாடுகள் இருப்பதை தவிர்க்க முடியாது. எந்த வகையிலும் இந்தியா கூட்டணியில் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியும். இதிலிருந்து திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ வெளியேற வாய்ப்பே இல்லை. இந்திய கூட்டணி தமிழகத்திலும் கூட்டம் நடத்த கட்டாயம் வாய்ப்பு உண்டு. 

விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும்' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.