உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் உட்பட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் உத்தரபிரதேச அரசைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
குறிப்பாக உத்தரபிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுவாக ஒலித்து வருகிறது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க கண்டனப் போராட்டம், கவர்னர் மாளிகை நோக்கி பேரணி என போராட்டங்கள் நடத்தியுள்ளது.
அதுபோலவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அக்கொடூர சம்பவத்தை தடுக்க தவறிய இந்தியப் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆகியோர் பதவி விலக வேண்டும் என அக்கட்சி சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை தமிழகம் முழுக்க நடத்தியுள்ளனர். ஈரோட்டில், காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்திற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 5ஆம் தேதி மதியம் வந்திருந்தனர். கட்சியின் மாநகர் விடுதலை இயக்க மாநில துணைத்தலைவர் தில்லைக்கரசி, மாவட்டத் தலைவர் சிறுத்தை சித்ரா ஆகியோர் தலைமையில் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.