ADVERTISEMENT

அமலாக்கத்துறை சோதனை; கத்தைக் கத்தையாகச் சிக்கிய ஆவணங்கள்

04:15 PM Sep 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் செப்டம்பர் 12 ஆம் தேதி காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துப்பட்டினம் ராமச்சந்திரன், திண்டுக்கல் சர்வேயர் ரெத்தினம், சீனியர் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்து பல காரியங்களை சாதித்துக் கொண்டிருக்கும் குளந்திரான்பட்டு கரிகாலன் ஆகியோரின் வீடு, அலுவலகம், கல்லூரி என அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள், ஆடிட்டர் எனப் பல இடங்களிலும் விரிவடைந்து 3 நாட்கள் நீடித்தது.

நேற்று இரவுடன் அனைத்து இடங்களிலும் சோதனைகள் முடித்துவிட்ட நிலையில், ராமச்சந்திரனின் புதுக்கோட்டை நிஜாம் காலனி அலுவலகத்தில் மட்டும் இன்று வியாழக்கிழமை மதியம் வரை சோதனைகள் நீடித்தது. சோதனையில் கத்தைக் கத்தையாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பண்டல்களாகவும் அலுவலக கணினிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹாட்டிஸ்க்குகள் 3 அட்டைப் பெட்டிகளிலும் கட்டி வாடகை கார்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். அனைத்து இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் அனைவரும் மதுரை செல்ல உத்தரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சோதனை நடத்தப்பட்ட அனைவருக்கும் சில நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் தயாரிக்கப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முன்னாள் ஆட்சியாளர்கள், அமைச்சர்களுக்கு உள்ள பங்குகளும், தற்போதைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள், அதன் மூலம் பெறப்பட்ட அரசு ஒப்பந்தங்கள், கனிம வள குவாரிகள் என அனைத்தும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுவரை உள்ள ஆற்று மணல், கிராவல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட எத்தனை சதவீதம் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பிட வல்லுநர்களின் உதவியைக் கேட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

அமலாக்கத்துறை விசாரணை முடியும் வரை புதிய மணல் குவாரிகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுத உள்ளது என்று கூறும் விவரமறிந்தவர்கள், மணல் அள்ளுவதற்காக மட்டுமே புதிய பாதை அமைத்து தயார் நிலையில் உள்ள கறம்பக்குடி குரும்பிவயல் மணல் குவாரியை நிறுத்தி வைக்கவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

இதற்கிடையில் ராமச்சந்திரன், கரிகாலன் தரப்பினர் மத்தியில் ஆளும் பா.ஜ.க முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பலமாகத் தேர்தல் நிதி வழங்கவும் தயாராகி அதற்கான ஆட்களையும் சந்திக்க நேரம் கேட்டுக் காத்திருப்பதாகக் கூறும் சிலர், எதிர்பார்த்த தேர்தல் நிதி கிடைத்துவிட்டால் அமலாக்கத்துறை நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்படலாம் என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT