தமிழகம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும் தங்கள் பணிபுரியும் கிராமத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். அங்கு கரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுகின்றனர்.
இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் காலை முதல் மாலை வரை தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் தங்கி கிராமத்தின் நிலவரத்தினை உடனுக்குடன் வட்டாச்சியர்க்கு தெரிவித்து வருகின்றனர். இதற்காக தினமும் தங்களது வீடுகளில் இருந்து தாங்கள் பணியாற்றும் கிராமத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் செல்கின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் பணியாற்றும் பல கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமங்களுக்கு செல்லும்போது, பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்துகிறார்களாம். நாங்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் எனச்சொல்லி அரசின் அடையாள அட்டையை எடுத்துக்காட்டினாலும் விடுவதில்லையாம்.
ஹெல்மெட் போடவில்லை என காரணம் சொல்லி அபராதம் விதிக்கின்றனராம். அபராதம் கட்டினாலும், உங்களை எஸ்.பி எங்கும் போகவிடாமல் இங்கேயே நிறுத்தி வைக்கச்சொல்லியுள்ளார் எனச்சொல்லி மணிக்கணக்கில் நிற்க வைத்துவிடுகிறார்களாம். இப்படி பல கிராம நிர்வாக அலுவலர்களை நிறுத்தியதால் அவர்கள் காவல்துறை மீது அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
இதுப்பற்றி தங்களது சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மார்ச் 28ந்தேதி முதல் பணிக்கு செல்லாமல், கரோனா விழிப்புணர்வு பணியை புறக்கணிக்கிறோம் என முடிவெடுத்து சங்க உறுப்பினர்களுக்கு தகவல் கூறியுள்ளனர். இதுப்பற்றிய தகவல் அறிந்த வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் – காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.