Skip to main content

பழங்குடியினப் பெண்ணுக்கு விஏஒ பாலியல் தொந்தரவு; கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

VAO suspended for Misbehaviour of Tribal Woman in viluppuram

 

விழுப்புரம் மாவட்டம், நல்லாபாளையம் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் கிருத்திகா (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், கிருத்திகாவும் அவருடைய 11 வயது மகனும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் தன்னை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக, அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். 

 

அவர் அளித்த அந்தப் புகார் மனுவில், ‘எனது கணவர் இறந்த நிலையில், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்கக் கோரி நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸிடம் விண்ணப்பம் ஒன்றை அளித்தேன். அப்போது அவர், கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.5,000 லஞ்சம் கேட்டு எனது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். அதன்பின், சில நாட்கள் கழித்து, அவரிடம் ரூ.3,000 கொடுத்து இறப்பு சான்றிதழை பெற்றேன். அதன்பின், அவர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு விதவை உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறியதால் நான் இ-சேவை மையத்தில் பதிவு செய்தேன். 

 

இதனையடுத்து, என்னை இரவு நேரத்தில் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தகாத முறையிலும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். அவர் என்னிடம் பேசிய செல்போன் பதிவு ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது குறித்து கண்டாச்சிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை வருவாய் கோட்டாட்சியர் காஜாசாகும் அமீது பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.