Skip to main content

செய்யாத குற்றத்தை ஏன் ஒத்துக்கணும்? விஏஓ மிரட்டலால் விஷம் குடித்த உதவியாளர்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

VAO Assistant issue

 

தர்மபுரி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், தான் செய்த குற்றத்தை உதவியாளரை ஒப்புக்கொள்ளும்படி தொடர்ந்து மிரட்டி வந்ததால், விசாரணைக்கு பயந்து உதவியாளர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒன்னப்பகவுண்டன அள்ளியில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஆக பணியாற்றி வருபவர் ரவீந்திரன் (35). கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பாப்பாரப்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வந்தார். 

 

பாப்பாரப்பட்டியில் பணியாற்றியபோது பலரிடம் பட்டா மாற்ற, சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவீந்திரன் ஒன்னப்பகவுண்டன் அள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

 

இதனால் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சிலர் அவருக்கு போன் செய்து, எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பட்டா மாற்றம் செய்யாமல் ஒன்னப்பகவுண்டன அள்ளிக்குச் சென்று விட்டீர்கள் எனக்கூறி, பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் பட்டா மாற்றம் செய்து கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர். 

 

இதற்கிடையே, தற்போது பாப்பாரப்பட்டி விஏஓ ஆக பணியாற்றி வரும் அண்ணாத்துரை என்பவருடைய கையெழுத்து மற்றும் சீல் ஆகியவற்றை ரவீந்திரன் போலியாக போட்டு, பணம் கொடுத்தவர்களிடம் சான்றிதழ் கொடுத்துள்ளார். 

 

இவருடைய நூதன மோசடி குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் தொடர்ந்து புகார்கள் சென்றன. ஆட்சியரின் உத்தரவின்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் ரவீந்திரனிடம் விசாரணை நடத்தினர். 

 

அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருந்து தப்பிக்க எண்ணிய ரவீந்திரன், பாப்பாரப்பட்டியில் விஏஓ உதவியாளராக பணியாற்றி வரும் ரவி (43) என்பவரின் உதவியை நாடினார். அப்போது அவர், விஏஓ அண்ணாத்துரையின் கையெழுத்து மற்றும் அவருடைய அலுவலக முத்திரையை தான்தான் போட்டதாக ரவியை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். 

 

இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் ரவிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை. 

 

விஏஓ ரவீந்திரன் மற்றும் இ-&சேவை மையம் நடத்தி வரும் ஒருவரும் சேர்ந்து விஏஓ உதவியாளர் ரவியிடம் தங்கள் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு விசாரணைக்கு ஆஜராகும்படியும் இல்லாவிட்டால் ரவி மீது உயர் அதிகாரிகளுக்கு மொட்டை பெட்டிஷன் போட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். 

 

இந்நிலையில், தான் செய்யாத குற்றத்தை செய்ததாக எதற்காக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கருதிய ரவி, விசாரணைக்கு பயந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) காலை தனது வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

 

மயக்க நிலையில் கிடந்த அவரை மீட்ட உறவினர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Village administration officer arrested in bribery case

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ; கையும் களவுமாக கைது செய்த போலீஸ்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
VAO arrested for taking Rs 1000 lakh from agricultural labourer

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி(51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி, மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் கிராமத்தில் 1200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை ஒரு லட்ச ரூபாய்க்கு கடந்த 21.2.2024 அன்று வாங்கியிருக்கிறார்.

இவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மற்றும் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட சித்தநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளது. அதன் பேரில் சமுத்திரம் வி.ஏ.ஓ. கூடுதல் பொறுப்பு சித்தாநத்தம் வி.ஏ.ஓ.வாக உள்ள சிவ செல்வகுமார்(41) என்பவர் வையாபுரியை தொலைபேசியில் அழைத்து பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். 

அதன் பேரில் வையாபுரி கடந்த 1.3.2024 மதியம் பட்டா பெயர் மாற்றத்துக்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ. சிவ செல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வி.ஏ.ஓ செல்வகுமார் தனக்குத் தனியாக 2000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர்மாற்றம் செய்வதற்கு உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி தான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன் என்று கெஞ்சி கேட்டதால், வி.ஏ.ஓ சிவ செல்வகுமார் தான் கூறிய தொகையில் பாதியை குறைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.  

லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று (5.3.2024) மதியம் 12 மணியளவில் சமுத்திரம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று, சிவ செல்வகுமார் வையாபுரியிடமிருந்து 1000 ரூபாய் லஞ்ச பணத்தை பெற்ற போது, கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.