Skip to main content

கைம்பெண்ணிடம் அத்துமீறல்; வி.ஏ.ஓ. கைது !

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

VAO Arogyadoss arrested by police

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது இளம்பெண் ஒருவர். இவரது கணவர் கடந்த 2014ஆம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவனை இழந்து வசித்துவரும் அந்த பெண், தனது கணவன் இறந்த இறப்புச் சான்றிதழும், விதவை சான்றிதழும் வழங்கக் கோரி இ-சேவை மூலம் விண்ணப்பித்தார். அவருக்கு சான்றிதழ் கிடைப்பதற்கு பரிந்துரை செய்ய வேண்டிய நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், பரிந்துரை செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார். 

 

இதற்காக அந்த கிராம நிர்வாக அலுவலரை அந்த பெண் நேரில் சென்று சந்தித்து சான்றிதழ்கள் கிடைப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பெண் மிகவும் சிரமப்பட்டு 3000 ரூபாய் பணம் தயார் செய்து கொண்டு போய் கொடுத்துள்ளார். அந்த 3000 ரூபாய் பணத்திற்கு அவரது கணவரின் இறப்புச் சான்று மட்டும் கிடைப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் உதவி செய்துள்ளார். 

 

அதன் பிறகு விதவைச் சான்றிதழைப் பெற்றுத் தருமாறும், விதவை உதவித்தொகை கிடைப்பதற்கும் பரிந்துரை செய்யுமாறு கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டுள்ளார். அதைச் செய்து கொடுப்பதாக உறுதி அளித்த கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், அந்த பெண்ணின் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அடிக்கடி அந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய கிராம நிர்வாக அலுவலர், தன்னை வந்து தனியாக சந்திக்குமாறு கூறியுள்ளார். 

 

ஒரு முறை அந்தப் பெண் தனது சகோதரனை தன்னுடன் அழைத்துச் சென்று அந்த கிராம நிர்வாக அலுவலரை சந்தித்துள்ளார். அப்போது அவரது சகோதரர், ஏன் தனியாக வந்து சந்திக்க அழைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகும் அந்தப் பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், ‘உனக்கு விதவைச் சான்று, விதவை உதவித்தொகை கிடைக்க வேண்டுமானால் நீ உனது சகோதரருடன் வரக்கூடாது. தனியாக வந்து என்னை சந்திக்க வேண்டும். என்னோடு தனிமையில் என்னை சந்தோஷப் படுத்த வேண்டும். அதற்கு சம்மதித்தால் உதவித் தொகை பெற்றுத் தருவேன்’ என்று பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

 

கிராம நிர்வாக அலுவலரின் பேச்சை செல்போனில் பதிவு செய்து கொண்ட அந்த பெண், இது குறித்து மாவட்ட ஆட்சியர் பழனியிடம் நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் சாகுல் ஹமீதுக்கு பரிந்துரை செய்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்திய கோட்டாட்சியர் சாகுல் ஹமீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யிடமும் புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வி.ஏ.ஓ. ஆரோக்கியதாஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று இரவு கைது செய்யப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.