வேங்கை வயல் விவகாரம்; 750 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை

nn

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கைவயல். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுக்கு மேல் ஆகிறது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படமால்இருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் என 737 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.அதன்படி மொத்தமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதே சமயம் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தற்பொழுது இதில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாகதெரிவித்துள்ளது. முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மூன்று பேர்மீது குற்றப்பத்திரிகை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் 750 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த வேங்கை வயல் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முரளிராஜா வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். சிபிசிஐடி போலீசாரும் அவரை விசாரித்திருந்தனர். முரளிராஜாவுக்கு குரல் மாதிரி பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இவர்கள் இதில் ஈடுபட்ட நபர்களாக கருதியுள்ளனர்.

Pudukottai Untouchability vengaivayal
இதையும் படியுங்கள்
Subscribe