Skip to main content

கரடி உயிரிழப்பு... பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் வண்டலூர் பூங்கா!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

Vandalur Park waiting for autopsy report of Bear

 

கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குப் பிறகு திறக்கப்பட்ட வண்டலூர் பூங்காவில் கரடி ஒன்று உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல சுற்றுலா தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 70 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது. சில நாட்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த 3 ஆம் தேதி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.

 

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரடி ஒன்று உயிரிழந்ததாக நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. உயிரிழந்த கரடியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே கரடி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வண்டலூர் பயணிக்கும் கோவை வ.உ.சி பூங்கா உயிரினங்கள்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Vandalur Traveling Coimbatore VUC Park animals

 

கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த  நிலையில், அங்கிருக்கும் பறவைகள், விலங்குகள் என அனைத்தும் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

1965 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா தொடர்ந்து செயல்பட்டு வந்தது. பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் என சுமார் 530 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு அங்கு வந்தது. இந்நிலையில்  வ.உ.சி உயிரியல் பூங்காவில் சரியான கட்டமைப்பு வசதி இல்லை எனவும், இயற்கைச் சூழல் இல்லை எனவும் கூறி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அங்கீகாரத்தை ரத்து செய்திருந்தது.

 

மாநகராட்சி சார்பில் அங்கீகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்ட நிலையிலும், அங்கீகாரத்தை தர மத்திய ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில், பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறை மேற்கொள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்நிலையில், கோவையில் உயிரியல் பூங்காவில் இருக்கும் பறவைகள், விலங்குகள் ஆகியவை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதலைகள், கிளிகள், மான்கள், பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் பாதுகாப்பாக கூண்டில் அடைக்கப்பட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

 

 

Next Story

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய கட்டண உயர்வு அமல்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Vandalur Zoo New Fee Hike Implemented

 

நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். இந்த பூங்கா அதன் அறிவியல் மேலாண்மை நடைமுறைகளுக்குப் பெயர் பெற்றது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2022 ஆம் ஆண்டில் பெரிய மிருகக்காட்சி சாலை பிரிவில் அதிக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இந்த பூங்கா நாட்டிலேயே ‘சிறந்த மிருகக்காட்சி சாலை’ என மதிப்பிடப்பட்டது. தற்போது, பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1977 வன விலங்குகள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

 

அண்மையில் பூங்காவிற்கான கட்டண உயர்வு குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் இலவச நுழைவுக் கட்டண சலுகை தொடர்கிறது. 5 வயது முதல் 12 வயது வரையிலும் மற்றும் 13 வயது முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக 20 ரூபாய்  மட்டும் வசூலிக்கப்படும்.

 

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூபாய் 25 ரத்து செய்யப்படுகிறது. சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டைம் ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டண முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூபாய் 115லிருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூபாய் 100லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வாகனக் கட்டணம் ரூபாய் 50லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவு (Video camera) கட்டணம் ரூபாய் 500லிருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எனப் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.