A van collided head-on with a car

Advertisment

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு மலேசியா நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த 12 பேர் டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். அதே சமயம், திருவாடானை அருகே உறவினர் வீட்டு விஷேஷத்துக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த 4 பேர் திருச்சி வழியாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இந்த விபத்தில் வேனில் இருந்து ஓட்டுநர் மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த விபத்தில், காரில் பயணித்த பவுன் டேனியல் (38), சூசன்ரேமா (10), ஹெலன் சாமா (7), மைக்கேல் (63) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ், படுகாயமடைந்த மற்றவர்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றது. அதன் பின்னர், தீவிர சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.