Skip to main content

தக்காளி ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து - தமிழக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

 A van carrying tomatoes overturned in an accident - Tamil Nadu border traffic damage

 

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மிகவும் ஆபத்தான மலைப்பகுதி ஆகும். தமிழகம், கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

 

இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் திம்பம் மலைப் பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகனம் மட்டுமே அனுமதித்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை  8வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதில் தன்வாய்ப்பாக ஓட்டுநர் தன்ராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.  வாகனம் கொண்டை ஊசி வளைவிலேயே கவிழ்ந்து விழுந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப் பகுதியில் இரவு 9 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு பண்ணாரி சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் தக்காளி பாரத்தை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து கவிழ்ந்து கிடந்த வேனை  ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் 6 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது. சரக்கு வேனில் நான்கு டன் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது தெரிய வந்தது. எனவே சிறிய ரக வாகனங்களுக்கும் பாரம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.