
திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து கரூர் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கரூர் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ்களில் வேலைக்கு சென்றுவருகின்றனர். அவர்கள் தினமும் நிறுவனங்களின் வாகனத்தில் சென்றுவருவர். அந்தவகையில் இன்று காலை வழக்கம் போல், நிறுவனத்தின் வாகனத்தில் 15 பேர் கரூர் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், முசிறி நகர பேருந்து நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வேனை முந்திச்செல்ல முற்பட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த இந்த வேன், சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்களும், அவ்வழியாக சென்றவர்களும் உடனடியாக 108ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.