Skip to main content

‘வள்ளலார் 200’ முப்பெரும் விழா; சிதம்பரத்தில் கோலாகலம்!

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

vallalar festival celebrated in chidambaram!

 

சிதம்பரத்தில் வள்ளலார்-200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர்.

 

சிதம்பரத்தில் வள்ளலார் இவ்வுலகிற்கு வருகையுற்று 200-வது ஆண்டுத் தொடக்கம், அதேபோல் அவர் தருமசாலை தொடங்கி 156-வது ஆண்டுத் தொடக்கம் மற்றும் அவர் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் காலை அகல் ஜோதி ஏற்றப்பட்டு அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. பின்னர், சிதம்பரம் கீழ வீதியில் இருந்து கோலாட்டம், கும்மி உள்ளிட்ட ஆடல் பாடல்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் பேரணியாக விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமைத் தாங்கி வள்ளலாரைப் பற்றி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்து அறநிலையத்துறை கடலூர் மண்டல இணை ஆணையர்(பொறுப்பு) ஜோதி வரவேற்றுப் பேசினார். இதில் சன்மார்க்க நெறியாளர்கள் மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டனர். வள்ளலார் குறித்து நடைபெற்ற பேச்சு, ஓவிய, கட்டுரை, இசை, ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து வள்ளலார் குறித்து சீனிவாசன், அன்னபூரணி ஆகியோரால் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. முன்னதாக வடலூர், சிதம்பரத்தில் அன்னதானம் செய்துவரும் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் பேசுகையில், “காக்கை 4 மணிக்கு எழுந்து தினந்தோறும் குளித்து கிடைக்கும் உணவை மற்ற காகத்துடன் பகிர்ந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறது. பறவையினங்கள், விலங்கினங்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறது. அதேபோல் மனிதர்களும் வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, அவரின் போதனைகளை உலகிற்கு எடுத்துக் கூறி, எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில், கிடைக்கும் உணவுகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறி வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.

 

விழா காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கடலூர் மண்டல செயற்பொறியாளர் கலையரசு, உதவி கோட்ட பொறியாளர் அசோகன் மற்றும் பல்வேறு கோவில்களில் செயல் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.