Skip to main content

மரங்களின் காதலர் மறைந்தார்... (படங்கள்)

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

 

மரம் பெ.தங்கசாமி.. இந்த பெயரைக் கேட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் மரங்கள் மீது ஆர்வமுள்ள அத்தனை பேருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து மரம் வளர்ப்பு பற்றிய ஆய்வுக்கு தமிழகம் வந்த மாணவர்கள் மரம் தங்கச்சாமி வீட்டுக்கு போய் தங்கி இருந்து ஆய்வு செய்தனர். அதனால் தான் அமெரிக்காவில் தி.பார்மர் ஆப் சட்ஸ் என்று மரம் தங்கச்சாமியை அட்டைப்படமாக வைத்து ஆங்கில புத்தகம் எழுதினார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் நண்பர். இன்று அரசு, தனியார், நிறுவனங்கள், பள்ளிகளில் மரக்கன்றுகள் வளர்க்க வித்திட்டவரும் தங்கச்சாமியே..

 

TREE


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்கடி கிராமத்தைச் சேர்ந்த பெ.தங்கச்சாமி.. 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் செய்த விவசாயம் பொய்துப்போனதால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் ஊரைவிட்டு ஓடுவதா? தற்கொலை செய்து கொள்வதா என்று தவித்த நேரத்தில் விவசாய நிலத்தை தரிசாக போட்டார். அந்த தரிசு நிலத்தில் நின்ற சில மரங்களில் அடைக்கலமான பறவைகளும், குருவிகளும் கொண்டு வந்து போட்ட விதைகள் முளைத்து மரக்கன்றுகள் வளரத் தொடங்கியது. வறட்சி ஏற்பட்ட காலத்திலும் மரக்கன்றுகள் அப்படியே நின்றது. வறட்சியால் கருகும் பயிர்களைவிட வறட்சியை தாங்கும் மரங்களை வளர்க்கலாமே என்ற முடிவுக்கு வந்தார் அந்த விவசாயி. வீட்டை சுற்றியுள்ள தனது விளை நிலத்தில் செடி கொடிகளுடன் மரக்கன்றுகள் வளர்வதை தடுக்கவில்லை அப்படியே விட்டார். வளர்ந்தது. கூடுதலாக பல மரக்கன்றுகளையும் கொண்டு வந்து வைத்தார். வறட்சியை தாங்கி வளர்ந்தது. சில ஆண்டுகளில் தன் தோட்டத்தில் வளர்ந்த மரங்களை விற்கு விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைத்தார். மரம் வளர்ப்போம் என்ற எண்ணத்திற்கு வந்தார்.

 

அதன் பிறகு மரம் வளர்ப்பை விவசாயிகளிடம் விழிப்புணர்வாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர்.. முன்னால் பாரதப்பிரதமர் இந்திராக் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தில் அதன் நினைவாக வீட்டு வாசலில் ஒரு மரக்கன்றை நட்டார். அதன் பிறகு எம்.ஜி.ஆர், ராஜிவ்காந்தி என்று நாட்டில் எத்தனை தலைவர்கள் மறைந்தார்களோ அவர்களின் மறைந்த நாட்களிலும் பிறந்த நாள், நினைவு நாட்களிலும் தனது தோட்டத்தில் மட்டுமின்றி அருகில் உள்ள பள்ளிக் கூடங்களில் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். இன்று அவர் வீட்டில் இந்தியாவில் மறைந்த அத்தனை தலைவர்களுக்கும் ஒரு மரம் நிற்கிறது.

 

அவர் கலந்து கொள்ளும் திருமணம், காதணி, போன்ற சுப நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பள்ளி, விழாக்கள் அரசு விழாக்கள் எங்கே நடந்தாலும் முதலில் அங்கே சென்று மணமக்களுக்கு மரக்கன்றுகளை பரிசு கொடுப்பதுடன் மரக்கன்றுகளை நட்ட பிறகு நிகழ்ச்சிகளை தொடங்குவார். சுமார் 40 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கொண்டு வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தனது தங்கை ஆசிரியை பூரணம் வாங்கிக் கொடுக்கும் புது சைக்கிளில் சுற்றப்பயணம் செய்து. மரம் வளர்ப்பை விளக்கி பேசினார். அரசு விழாக்களில் மரக்கன்று நட்டு விழா தொடங்கும் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தவர் மரம் தங்கச்சாமி. 

 

TREE

 

இதனால் தனியார் நிலங்களில் மரக்கன்றுகளை வளர்ப்பதை ஊக்கப்படுத்தி வந்ததால் ஆ.ராஜா மத்திய அமைச்சராக இருந்த போது பாராட்டு சான்றிதழும், 2007ம் ஆண்டு தமிழக அரசின் சுற்றுகசூழல் விருதும் வழங்கப்பட்டது. இதுவரை 500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் சேந்தன்குடி கற்பகசோலையில் வந்து தங்கி இருந்து ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் வெளிநாட்டு மாணவர்களும் ஏராளம். மரப்பயிரும் பணப்பயிரே.. என்ற வாசகம் அவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். இன்று அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், பேருந்து நிலையங்களில் ஓங்கி உயர்ந்து நிற்கும் பல ஆயிரம் மரங்கள் தங்கச்சாமி வைத்த கன்றுகள் தான். 

 

கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணித்து செல்வார்கள்.. அதே போல 48 நாட்கள் பச்சை வேட்டி சட்டையுடன் விரதம் இருப்பார் தங்கச்சாமி. இயற்கை தான் நம் கடவுள். நமக்கு நாமே கடவுள் என்ற கோட்பாடு கொண்டதால் 48 நாட்கள் விரதம் முடிந்து வீட்டிற்குள் வைத்துள்ள ஆளுயர கண்ணாடி முன்பு நின்று விரதம் கலைப்பார். இயற்கைகாக மாலை, விரதம் இருந்தவர் தங்கச்சாமி. 

 

தனது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று கண்களை மூடி வணங்கி கண்களை திறக்கச் சொல்வார் எதிரே கடவுளாக நிற்பது நமக்கு நாமே.. ஆம் கண்ணாடியில் விருந்தாளியின் உருவமே தெரியும். புதிய மரக்கன்று விதைகள் நம் தோட்டத்தில் வளர வேண்டும் என்றால் பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பறவைகளுக்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை வைத்து பறவைகளை வரவேற்பது அவரது பழக்கம். பல வகையான மரங்கள் அந்த தோட்டத்தில் வளர்ந்து நிற்கிறது. பனைமரங்களை அதிகம் வளர்த்தால் நிலத்தடி நீரை சேமிக்கலாம் என்று தனி தோப்பாக பனை மரங்களை வளர்த்தார்.

 

TREE

 

ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு மரக்கன்று நட்டால் அந்த குழந்தை திருமணத்திற்கு அந்த மரம் உதவும் திருமணத்தில் ஒரு கன்று வைத்தால் பிறக்கும் குழந்தையின் படிப்புக்கு உதவும் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் மரக்கன்று கொடுத்து வளர்த்து வைத்தார். பள்ளிக்குழந்தைகள் மத்தியில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்திய முதல் நபராக இருந்தார். எந்த பொது இடத்திலும் மரங்களை வெட்டி முயன்றால் தடுக்கும் முதல் ஆளாக நின்றதால் மரங்கள் பாதுகாக்கப்பட்டது. அவருக்கு துணையாக அவரது துணைவியார்களும், மகன்கள் மரம் தங்க.கண்ணன், காட்டுராஜாவும் நின்றார்கள். கடந்த வாரம் தங்கச்சாமியின் மனைவி இறந்தார். அந்த துயரமே தங்கச்சாமியை விரைந்து அழைத்துக் கொண்டது இயற்கை.

 

இப்படி மரங்களின் காவலனாக, காதலனாக இருந்த சேந்தன்குடி கற்பகசோலை மரம் பெ.தங்கச்சாமி 31.11.1937 ல் பிறந்து இன்று 16.9.2018 மாலை மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் வைத்த மரங்கள் நிற்கிறது. மரக்கன்று நடவேண்டும் என்ற பணிகள் எழுந்து நிற்கிறது. அந்த பணிகளை இன்று பல லட்சம் இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.