Skip to main content

மோடி ஆட்சியின் கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி பரவாயில்லை: ப.சிதம்பரம்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
pc


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வல்லம்ராஜன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி வரவேற்புரையாற்றினார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அவர் பேசியதாவது,

காமராஜர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒருபாடம். தற்போது மத்திய ஆட்சியில் 31 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 69 சதவீத வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் இங்கு தற்போது நடக்கிற நிகழ்வுகளை, கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி பரவாயில்லை.

சிறுபாண்மையினர், தலித்துகள், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் பாரதிய ஜனதா ஆட்சியில் அரங்கேறி வருகின்றன. இந்தியாவில் தற்போது அனைத்து சமுதாயத்தினரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். மோடி ஆட்சியில் இந்தியா விபரீதமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது. நான்கு பேர் தூக்கி கொண்டு போகும் போது தான் என் குரல் நிற்கும். என் பேனா எழுதுவது நிற்கும்.

 

 

கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் வரி பிடித்தம் செய்ததன் மூலம் ரூபாய் 10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் எங்கே போனது? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றார். இதையெல்லாம் அவர் செய்திருக்கிறாரா? இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

பயிர் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரீமியம் தொகை வசூலிக்கிறார்களோ, அந்த அளவு இழப்பீடு தர வேண்டும். 2016- 17 ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூபாய் 12 ஆயிரம் கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை 5ஆயிரம் கோடி தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இதுபோன்ற திட்டங்களால் இந்திய பொருளாதாரம் வலுவிழந்து உள்ளது. பண மதிப்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதி கெட்டுள்ளது.
  pc


தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் பேசும்போது, பண மதிப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இது இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புள்ளிவிவரம். இந்தியா முழுவதும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் நிம்மதியின்றி உள்ளனர்.

 

 

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது என்று யோசித்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு பேர் உள்ளனர். இவர்களிடம் கணக்கு கேட்க ஆள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சத்துணவு முட்டை வழங்கும் திட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி நேரு குடும்பம் பதவிக்காக அலைகிறது என்று கூறி வருகிறார். ஆனால் 1989ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் 29 ஆண்டுகளாக இந்த நேரு குடும்பத்தில் யாரும் அரசு பொறுப்புக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருந்தது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இருந்தது வல்லரசு நாடுகள் உதவியாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.