மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி அவர்களின் பிறந்தநாள் 8ஆம் ஆண்டு நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை முத்தமிழ் பேரவை திருவாடுதுறை தி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது.

Advertisment

kalaignar vairamuthu

சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் சிறந்த கட்டுரைகளுக்கான விருதுகளையும் நக்கீரன் குழுமத்தின் இலக்கிய மாத இதழான இனிய உதயம் நடத்திய கவிதை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றி கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பித்தார். வைரமுத்து பேசிய போது கலைஞருடன் சேர்ந்து சென்று சின்னகுத்தூசியை சந்தித்த நினைவை பகிர்ந்தார். அவரது பேச்சில் ஒரு பகுதி...

"சின்னகுத்தூசி அவர்களோடு, உங்களில் பலருக்கும் இருக்கும் அளவுக்கு எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை. நான் அவர் அறைக்கு அடிக்கடி சென்று வந்தவன் இல்லை. ஆனால், கலைஞர் மூலமாக எனக்கு அவர் அறிமுகம். ஒரு முறை கலைஞர் முதல்வராக இருந்தபொழுது, காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டம் பதினோரு மணி வாக்கில் நிறைவு பெற்றது. நான் கலைஞரை சந்திக்கச் சென்றிருந்தேன். அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததற்கும் மதிய உணவுக்கும் இடையில் இரண்டு மணிநேர இடைவெளி இருந்தது.

Advertisment

கலைஞரின் உதவியாளர் வந்து கேட்டார், "அய்யா... எங்க போகணுமுங்க?" என்று. கோபாலபுரமா, சி.ஐ.டி காலனியா, அறிவாலயமா, எங்கு செல்ல வேண்டுமென கலைஞர் கூறுவார் என்று பதிலுக்குக் காத்திருந்தோம். "முரசொலி அலுவலகத்தில் சின்னகுத்தூசி இருக்காரானு பாரு" என்றார். உதவியாளர் தொலைபேசியில் பேசிவிட்டு வந்து "இருக்கிறார்" என்று பதிலளித்தார். "வண்டிய முரசொலிக்கு விடு" என்றார் கலைஞர். நானும் உடன் சென்றேன். அவர்கள் இருவரும் அந்த ஒரு மணிநேரத்தில் பேசிக்கொண்டது, எனக்கு பல தகவல்களை தந்தது. அவர்களது பேச்சில் இருந்த உலகம் நான் பிறக்கும் முன் இயங்கிய உலகம். அந்த உலகம் குறித்து அவர்களது பேச்சின் வாயிலாக தெரிந்து கொள்வது எனக்கு பேரானந்தமாக இருந்தது."