Skip to main content

விளம்பரப்பலகை உரிமம்: அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் குறித்து விசாரணை தேவை! ராமதாஸ்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018


 

ஆண்டுக்கு  ரூ.10,000 கோடி அளவுக்கு வணிகம் நடக்கும் விளம்பரப் பலகைகள் தொழிலை அமைச்சரின் சொந்த நலனுக்காக முடக்கி வைப்பதை அனுமதிக்கக் கூடாது. அமைச்சர் வேலுமணியின் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதால் அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3750 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப் பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க அனுமதி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், அதை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது. ஓர் அமைச்சரின் சொந்த லாபத்திற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1250 கோடி வருமானம் கிடைக்கும் தொழிலை ஆட்சியாளர்கள் முடக்கி வைப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
 

தமிழ்நாட்டில் விளம்பரப்பலகைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் அனைத்து விளமபரப் பலகைகளையும் அகற்றும்படி 2008-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து விளம்பரப்பலகைகளை அமைப்பதற்கான புதிய விதிகளை தமிழக அரசு வகுத்தது. ஆனாலும், அதன்படி  புதிய உரிமங்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம், தனியாருக்கு சொந்தமான இடங்களில் விளம்பரப்பலகைகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது. விளம்பரப் பலகைகளை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பான விண்ணப்பங்களை ஒற்றைச் சாளர முறையில் பெற்று, ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த 2016&ஆம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும்  இதுவரை விளம்பரப்பலகைகளை அமைப்பதற்காக ஓர் உரிமத்தைக் கூட தமிழக அரசு வழங்கவில்லை. அதுமட்டுமின்றி, சென்னையில் இத்தகைய உரிமம் வழங்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

velumani


 

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் சொந்த லாபம் கருதியே விளம்பரப்பலகைகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகரம் முழுவதும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து அவற்றில் தனியார் விளம்பரங்களை செய்து கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.  இந்த நிழற்குடை விளம்பரங்கள் அனைத்தையும் ஸ்கைராம் அட்வர்டைசிங், ஷைன் அட்வர்டைசிங், ஃபைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே செய்து வருகின்றன. இவை அனைத்தும் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் தாமோதரன் சீனிவாசன் என்பவரே இயக்குனராக உள்ளார். இந்த 3 நிறுவனங்களும்  2015-ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் 10 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டால் அதனால் அமைச்சர் வேலுமணி பினாமி நிறுவனங்களின் வருமானம் குறைந்து விடும் என்பதால் தான், தனியார் விளம்பரப் பலகை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 2000 இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் கோரப்பட்டுள்ளது. ஆனால், 2016 செப்டம்பர் மாதம் முதல்  2017 செப்டம்பர் வரை 900 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டிருப்பதாக தகவல் உரிமைச் சட்டப்படி அளித்த பதிலில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றமே ஆணையிட்ட  பிறகும் விளம்பரப் பலகை அமைக்க உரிமம் வழங்காத தமிழக அரசு மீது சில நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தன. அவ்வாறு வழக்குத் தொடர்ந்த நிறுவனங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்களின் விண்ணப்பங்களை தமிழக அரசு நிராகரித்து விட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்தன.
 

தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டால் சென்னையில் மட்டும்  தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் ஆண்டுக்கு ரூ.250 கோடி வருமானம் கிடைக்கும். தமிழகம் முழுவதும் ரூ.1250 கோடி வருமானம் கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.3750 கோடி வருவாய் கிடைத்திருக்கும். மாறாக, அமைச்சருக்கு வேண்டிய நிறுவனங்கள் அமைத்துள்ள பேருந்து நிழற்குடை விளம்பரங்களால் தமிழக அரசுக்கு சில லட்சங்கள் கூட வருவாய் கிடைப்பதில்லை. அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனங்கள் என்பதாலேயே அவை வரி செலுத்துவதற்கு மறுக்கின்றன. அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1250 கோடி ஆண்டு வருவாயை இழப்பது ஏற்கத்தக்கதல்ல; இது கண்டிக்கத்தக்கது.
 

அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளை அமைக்கும் தொழில் மூலமாக மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உரிமம் வழங்க அரசு மறுப்பதால் இந்த 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு  ரூ.10,000 கோடி அளவுக்கு வணிகம் நடக்கும் இந்த தொழிலை அமைச்சரின் சொந்த நலனுக்காக முடக்கி வைப்பதை அனுமதிக்கக் கூடாது. அமைச்சர் வேலுமணியின் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதால் அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3750 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப் பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு அரசு உரிமம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.