Skip to main content

மது ஒழிப்பு போராளி, வைகோ தாயார் மாரியம்மாள் நினைவு தினம்... கிராம மக்கள் மலரஞ்சலி...

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
vaiko


 

நெல்லை மாவட்டம் வைகோவின் பூர்வீக கிராமமான கலிங்கப்பட்டியில் வைகோவின் தாயார் மாரியம்மாளின் மூன்றாமாண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
 

தன்னுடைய தள்ளாத முதிர்ந்த வயதிலும் சமூக அக்கரை கொண்ட வைகோவின் தாயார் சமூக நலனுக்காக வீதியில் வந்து போராடி வெற்றிகண்ட போராளி. கலிங்கப்பட்டி மட்டுமல்லாமல் சுற்றுப்பட்டிகளின் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் வைகோவின் தாயாரான மாரியம்மாள்.
 

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கலிங்கப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை திறந்ததை கிராம மக்களோடு எதிர்த்தவர். மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டதால் அதை மூட வேண்டும். மக்களுக்கு கேடு விளைவிக்கும் மது கூடாது என்று ரோட்டிற்கு வந்து போராடினார் மாரியம்மாள். அப்போது வயதில், நடை தள்ளாடும் முதுமை நிலை. அதையும் லட்சியப்  படுத்தாமல் வீதிக்கு வந்ததால் அவர் பின்னால் கலிங்கப்பட்டி கிராமமே திரண்டு போராடியது. மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகு மக்களின் ஆவேசம் பீறிட மதுக்கடை உடைக்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கலிங்கப்பட்டி டாஸ்மாக் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது.
 

அந்த சம்பவத்திற்குப் பின்னர் முதுமை காரணமாக காலமானார் மாரியம்மாள். அவரது நினைவு நாளான இன்று அவரது கலிங்கப்பட்டி இல்லத்திலும், மெயின் வீதிகளிலும் வைக்கப்பட்ட அவரது படத்திற்கு ஊர் பொது மக்கள், இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மலரஞ்சலி செலுத்தினர். தனது கலிங்கப்பட்டி இல்லம் வந்த வைகோ கலங்கிய கண்களோடு அங்குள்ள தன் தாயார் மாரியம்மாள் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மா.தி.மு.க.வின் மா.செ.க்களான ராஜேந்திரன், ரமேஷ், புதுக்கோட்டை செல்வம், வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரன் உட்பட பலர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.