
ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகர் ரஜினிகாந்த் இன்று (25/12/2020) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினியோடு அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருக்கிறார் எனக் கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்துத் தொலைப்பேசியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் விசாரித்தார் வைகோ. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினியிடம் அவரது உடல்நலம் குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொலைப்பேசி மூலம் கேட்டறிந்தார். 'தான் நலமுடன் இருப்பதாக' ரஜினிகாந்த் தெரிவித்ததாக வைகோ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.