திருச்சியில் இன்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் உழவர் சந்தையில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடங்களில் வீரவணக்கம் ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில் மூன்று வரிசையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நின்று வரிசையாக வந்தனர். அப்போது, அவர்களுடன் நடந்து வந்த அவர், திடீரென மொழிப்போர் என்றாலே மாணவர்கள் தான் அதிமுக்கியமானவர்கள். ஆகவே, நீங்கள் முன்னே நடக்க வேண்டும்...நான் பின்னால் வருகிறேன் எனக்கூறி மாணவர்களுக்குப் பின்னால் மாவட்டச் செயலாளர்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடந்து வந்தார் வைகோ.
அதன்பின்னர், கல்லூரி மாணவர்களின் கைகளில் மலர் வளையத்தைத் தந்து விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தச் சொன்னார்.
மேலும், 1965 ல் நடந்த மொழிப் போர் களத்தில் மாணவனாக நின்று போராடியவன் நான், இன்று அன்னைத் தமிழ் மொழி காப்பதற்கும், ஆதிக்க இந்தியை ஒழிப்பதற்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இதுதவிர, தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், தமிழ் ஈழம் பெறுவதற்காகவும் மாணவர்கள் கண்ணும், கருத்தோடும் செயல்பட வேண்டும் என்று பேசியதோடு, மாணவர்களுக்கு மத்தியில் நின்று அவரே முழக்கம் எழுப்பியது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.
இதனால், திருச்சி மாவட்டங்களின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் வைகோவுடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
மாணவர்களுடன் பேசியவாறே நடந்தே வந்து காரில் ஏறினார் வைகோ.
கல்லூரி மாணவர்களுக்கும் மக்களின் அடிப்படை பிரச்சனைக்கும், தமிழகத்தை காக்கும் பல்வேறு பிரச்சனைக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவருடன் மிக எளிதாக நிற்கிறோம் என்ற பெருமையும்...வைகோவுக்கு இளம் மாணவர்களும் நம் பின்னால் இவ்வளவு ஆர்வமாக வருகின்றனரே என்ற பெருமிதமும் ஏற்பட்டது.
ஊர்வலத்தில் மாநிலமகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் சேரன், சோமு, மற்றும் மாநில தேர்தல் பணிச்செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.