கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் கடந்த 8 மாதங்களாக காவல் ஆய்வாளர் இல்லாமல் காவல் நிலையம் இயங்கி வருகிறது. வள்ளலார் வாழ்ந்த, மறைந்த ஊர் நகராட்சி அந்தஸ்து பெறக் கூடிய அளவு பெரிய பேரூராட்சி அலுவலகம், ரயில்நிலையம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் இப்படி பரபரப்பாக இயங்கி வரும் பெரிய பேரூராட்சி வடலூர்.
சென்னை கும்பகோணம், சேலம் கடலூர் இப்படி நான்கு வழி சாலையின் சந்திப்பில் அமைந்துள்ளது வடலூர். இரவு பகல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரம். வடலூர் காவல் நிலைய எல்லையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் வடலூர் வள்ளலார் சபையில் ஆதரவற்ற மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இப்படிப்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், கிரிமினல் குற்றங்களை தடுக்கவும், கிராமப்புறங்களில் சாதி மதக் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கவும், வடலூர் காவல் நிலையம் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
இப்படிபட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய அந்த காவல் நிலைய அதிகாரியாக இருக்க வேண்டியவர் காவல் ஆய்வாளர். மேலும் சிறுசிறு சம்பவங்கள் பிரச்சினைகளை காவல் நிலைய போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கொண்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். வழக்குப் பதிவு செய்வார்கள். பெரிய குற்றங்கள் கிரிமினல் சம்பவங்கள் கொலை வழக்குகள் இப்படிப்பட்டவைகளை விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டியவர் காவல் ஆய்வாளர் தான்.
அப்படிப்பட்ட ஒரு முக்கிய பணி செய்ய வேண்டிய ஆய்வாளர் பணியிடம் கடந்த 8 மாதங்களாக காலியாக உள்ளது. இந்த காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் கூடுதலாக பணி செய்து வருகிறார். எனவே வடலூர் காவல் நிலையத்திற்கு நிரந்தர காவல் ஆய்வாளர் பணியை நிரப்ப வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் காவல் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத உள்ளனர். காவல்துறை உயரதிகாரிகள் இதைக்கண்டு கொள்வார்களா?