Skip to main content

தடுப்பூசி போடப்பட்ட குழந்தை 3 மணிநேரத்தில் உயிரிழப்பு... கோவையில் பரபரப்பு

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Vaccinated child incident in Coimbatore

 

கோவையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை மூன்று மணிநேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரியைச் சேர்ந்த பிரசாந்த் - விஜயலட்சுமி தம்பதியினர், கோவை மசக்காளிபாளையத்தில் தங்கி வேலைசெய்து வருகின்றனர். பிரசாந்த் அந்தப் பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிசாந்துக்கு நேற்று (17.02.2021) அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெற்றோர்கள்  தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட மூன்றுமணி நேரத்தில் குழந்தை மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர், குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

 

தடுப்பூசி காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். தற்போது உயிரிழந்த குழந்தை கிஷாந்தின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் பிரேதப் பரிசோதனை தொடங்கவுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் தந்தை, கோவை அரசு மருத்துவனை வளாகத்தில் வேறொரு குழந்தையை கிஷாந்த்தாக பாவித்து இறுகி கட்டியணைத்து கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “அந்தக் குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்தில் நேற்று இதேபோன்று 13 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த ஒரு குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. எனவே பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இதில் உயிரிழப்புக்கான உண்மை தெரியவரும்” எனக்  கூறியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.