தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலை சம்பவங்களும் அதிகம் நடக்கிறது. கடந்த 2017, அக்.23- ம் தேதி கந்து வட்டி கொடுமையால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓரு குடும்பம் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகும் காவல் நிலையங்களில் கந்து வட்டி புகார்கள் ஏராளமாக வருகின்றன.

subramani

Advertisment

Advertisment

இந்த நிலையில் நாகர்கோவில் பெரிய ராசிங்கன் தெருவை சோ்ந்த சுப்ரமணியன் (52) சிகரெட், பிஸ்கெட், மிட்டாய் மொத்த வியாபாரம் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் ருக்குமணி (72), மனைவி ஹேமா (48), மற்றும் மகள் ஷிவானி (20) இவள் குலசேகரத்தில் உள்ள தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு சுப்ரமணியனின் தொழிலில் பெரிய அளவு லாபம் வராததால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை சரி கட்ட முடியாமல் திணறி வந்த சுப்ரமணியன் அதிக வட்டிக்கு பணம் வாங்கி அதை செலுத்த முடியாமல் அவதி பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பணத்தை கொடுத்த கந்து வட்டி கும்பல் அவரை அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தனது மனைவியிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று கடையை திறக்க சுப்ரமணியன் செல்லாததால் அவருடைய ஊழியர் ஓருவர் சுப்ரமணியனின் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு பூட்டி கிடந்தது. வீட்டுக்குள் செல்போனும் ஒலித்து கொண்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது அனைவரும் இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் வடசேரி காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுப்ரமணியன், தாயார், மனைவி மற்றும் மகள் ஆகிய நான்கு பேரின் உடலையும் மீட்டனர். இவர்கள் நான்கு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.