Skip to main content

கைதி படம் பார்க்க சென்ற கொலை கைதி... செருப்பால் சிக்கிய சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

காங்கிரஸ் பிரமுகர் மனைவியை கொலை செய்து விட்டு கைதி படம் பார்க்க சென்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதாவனத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவருக்கு வயது 70. இவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு வயது 65. இந்த தம்பதிக்கு  ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ராமச்சந்திரன் திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டு, திங்கள் கிழமை மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மனைவி ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்துள்ளது. 

 

incident



பின்னர் இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு வாசலில் இருந்த தேய்ந்து போன ஒரு ஜோடி செருப்பை கைப்பற்றி விசாரணையை நடத்தி வந்தனர். அந்த செருப்பு திருத்துறைப்பூண்டி வாளமாபுரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான முருகானந்தம் என்பவருக்கு சொந்தமானது என்பதை அடுத்த சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். ராமசந்திரன் அணியும் வெள்ளை வேட்டி சட்டைகளை துவைப்பதற்கு முருகானந்தத்திடம் கொடுப்பது வழக்கம் . முருகானந்தமும் கொடுக்கும் துணிகளை வெளுத்து விட்டு பணம் வாங்கி செல்வார். அதே போல் முருகானந்தம் துவைத்த துணிகளை கொடுத்துவிட்டுச் சென்ற பின்னர் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

 

incident



மேலும் சலவைக்குத் துணி எடுத்துச்செல்ல ராமசந்திரன் வீட்டுக்கு முருகானந்தம் அடிக்கடி வந்து சென்றதை உறுதி செய்த காவல்துறையினர், அவர் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்து எங்கு இருக்கிறார் என்பதை ஆய்வு செய்தனர். அப்போது அவர் திருத்துறைப்பூண்டியில் கைதி படம் ஓடும் திரையரங்கில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த திரையரங்கிற்கு வெளியே படம் முடியும் வரை போலீஸார் காத்து கொண்டிருந்தனர். படம் முடிந்ததும். காலில் செருப்பில்லாமல் கை நிறைய பணத்துடன் வெளியே வந்த முருகானந்தத்தை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் கொலைக்கான காரணத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். 


சம்பவம் நடந்த அன்று  துவைத்த துணிகளை கொடுப்பதற்கு வீட்டிற்குச் சென்றபோது ராஜேஸ்வரி பீரோவை திறந்து அதில் பணத்தை எடுப்பதை முருகானந்தம் பார்த்துள்ளான். இதைப்பார்த்த முருகானந்தம் பணத்துக்கு ஆசைப்பட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பீரோவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு தப்பித்துள்ளான். அப்போது, தான் காலில் போட்டு வந்த செருப்பை கொலை செய்த வீட்டில் விட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் கொலை செய்ததை யாரும் பார்க்காததால், யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் தீபாவளிக்கு வெளிவந்த கைதி படம் பார்க்க முருகானந்தம் சென்றதாகவும், வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.