Skip to main content

சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள்!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Unsealed bore wells in dangerous condition on the side of the road!

 

மணப்பாறை சிறுவன் சுர்ஜித் ஆழமான ஆழ்குழாய் கிணறுக்குள் விழுந்து அரசாங்கமும் தனியார் மீட்புக் குழுவினரும் பல நாள் இரவு பகலாக போராடியும் கூட சிறுவனை சடலமாகவே மீட்க முடிந்தது. அதன் பிறகு பயனற்ற அனைத்து ஆழ்குழாய் கிணறுகளையும் பாதுகாப்பாக மூட உத்தரவிட்டது அப்போதைய அரசாங்கம். அரசு உத்தரவை நிறைவேற்றுவதாக கூறி அவசர கதியில் சணல் சாக்குகளையும், சிமெண்ட் சாக்குகளையும் கட்டி தற்காலிகமாக மூடிய அதிகாரிகள், அதனை பாதுகாப்பாக மூட மறந்தே போய்விட்டனர். இதனால் அலட்சியமாக மூடப்பட்ட ஆழமான ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகளில் மூடப்பட்டுள்ள சாக்குகள் தற்போது கிழிந்து ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் சேந்தன்குடி செல்லும் சாலை ஓரத்தில் குடியிருப்பு பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்களின் குடிதண்ணீர் தேவைக்காக ஆழமான ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் அடிப்பம்பு அமைத்துள்ளனர். 

 

நிலத்தடி நீர் கீழே சென்றதால் பல வருடங்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது. அதனால் அந்த அடிபம்பு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பல வருடங்களாக பயன்படுத்தப்படாத அடிப்பம்பில் இருந்த கைபிடி, இரும்பு குழாய்கள் உள்ளிட்டவற்றை கழற்றிச் சென்றுள்ளனர். அதனை கழற்றிச் சென்றவர்கள் 6 அங்குலம் சுற்றளவுள்ள ஆழ்குழாய் கிணற்றை பாதுகாப்பாக மூடாமல் சென்று விட்டனர். 

 

இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, "மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழந்த சம்வங்கள் நடந்த பிறகு, இது போன்ற பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாக மூடி மழைநீர் சேகரிப்பிற்காக பயன்படுத்த வேண்டும். இப்படி மழைநீர் சேகரித்தால் நிலத்தடி நீர் உயரும் என்றும் அரசு உத்தரவிட்ட பிறகு பல இடங்களில் தற்காலிகமாக மூடினார்கள். 

 

ஒரு சில இடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பிற்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் பல இடங்களில் இது வரை பாதுகாப்பற்ற ஆபத்தான முறையிலேயே ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. அதில் ஒரு ஆபத்தான ஆழ்குழாய் கிணறு தான் பனசக்காட்டில் உள்ளது" என்றனர். 

 

இதே போல வம்பனில் இருந்து பொற்பனைக்கோட்டை செல்லும் வழியில் ஒரு ஆபத்தான திறந்த வெளியில் ஆழ்குழாய் கிணறு உள்ளது. ஏற்கனவே அவசரத்தில் சாக்கு வைத்து மூடிய பல ஆழ்குழாய் கிணறுகள் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. விரைவில் பாதுகாப்பாக மூடி மழைநீர் சேமிப்பிற்க்கு பயன்படுத்த வேண்டும் என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.