Skip to main content

பொறுப்பற்ற பொதுப்பணித்துறை.. உயிர் பலிக்குக் காத்திருக்கும் வகுப்பறைகள்...!!!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019


சாதாரண மழைக்கே புதிதாகக் கட்டப்பட்டுவரும் பள்ளிச் சுற்றுசுவர் சின்னபின்னமாகி இடிந்து விட, அதே ஒப்பந்தகாரர்களால் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளின் தரமும், அதில் கல்விப் பயிலக் காத்திருக்கும் மாணக்கர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கும் யார் உத்திரவாதம்.? என கேள்வியெழுப்பியுள்ளனர் சம்பந்தப்பட்ட கிராமத்து மக்கள்.

 

 Unresponsive Public Service department


     

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியிலுள்ளது 312 மாணக்க, மாணக்கியர்கள் பயிலும் அரசு மேல் நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் நபார்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் 4 வகுப்பு அறைகளும், அதனின் மேல் தளத்தில் 4 வகுப்பறைகளுமாக மொத்தம் 8 வகுப்பறைகளும், மாணவர், மாணவிகளுக்கென 2 கழிப்பிட அறைகள் மற்றும் பள்ளி வளாகத்தைச் சுற்றி சுற்றுசுவர் வளாகமும் பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் கட்டித் தர ரூ.2 கோடியே 1லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

 

 

 Unresponsive Public Service department

 

இந்த ஒப்பந்தத்தை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த கே.வி.கே.நிறுவனம் எடுத்தது. அதன் படி கடந்த மூன்று மாதங்களாக பள்ளியில் கட்டிடப்பணி நடைப்பெற்று வருகின்றது. இந்தக் கட்டிடப் பணியை  தினசரி பார்வையிட பொதுப்பணித்துறையின் 4 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று பெய்த சாதரண மழையில் 6 அடி உயரமும், 80 அடி நீளமும் கொண்டுக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

 

 Unresponsive Public Service department



இதுப்பற்றி பேசும் பொழுது,  " கட்டிடப் பணியின் போது தினசரி தண்ணீர் விட வேண்டும். ஆனால் இங்கு தண்ணீர் விடுவதில்லை. வெறுமனே பூச்சு மட்டும் செய்துவிட்டால் என்ன பிரயோசனம்.? இதைக் கண்காணிக்க பொறியாளர்கள் இருந்தாலும் பெரும்பாலும் யாரும் வருவதில்லை. காம்ப்சுவண்ட் சுவரின் நிலையே இப்படியென்றால் வகுப்பறைகளின் தரம் என்னாவது.? குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகின்றது. பொதுப்பணித்துறை கவனம் செலுத்தினால் நல்லது." என்கின்றனர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்.

 

பொதுப்பணித்துறையின் எஸ்.டி.ஓ-வான கண்ணனோ, " சார்.!!! விழுந்த சுவரைத் தானேக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்." என்றவரிடம்,  இப்படிப் பொறுப்பற்றப் பதிலால் மாணாக்கர்களின் பாதுகாப்பு என்னாவது.? என்றோம். லைனைக் கட் செய்து விட்டார் அவர். மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா.?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.