Skip to main content

தமிழகத்தில் நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்! சேலத்தில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

stalin

 

தமிழகத்தில் நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இன்று (செப்டம்பர் 18, 2018) நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கூறினார்.


தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் ஊழல் புரையோடிக் கிடக்கும் அதிமுக அரசைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.


திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சேலத்திற்கு முதன்முதலாக வருகை புரிந்தார். நேற்று இரவே சேலம் வந்துவிட்ட அவருக்கு மாவட்ட எல்லையான தலைவாசலில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியது: 

 
தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக அரசு ஊழல் அரசாக மாறிவிட்டது. அகில இந்திய அளவில் ஊழல் நிறைந்த அரசாக தமிழக அரசு திகழ்கிறது. குட்கா ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், நெடுஞ்சாலை ஊழல் என கணக்கில் கொள்ள முடியாதது ஏராளம். சேலம் என்றாலே மாம்பழத்திற்கு சிறப்பு வாய்ந்தது. அந்த மாம்பழத்தை துளைக்கும் வண்டு போல எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அகில இந்திய அளவில் கறைபடிந்த அமைச்சரவை தமிழகத்தில்தான் உள்ளது.

 

stalin

 

எடப்பாடி பழனிசாமி மீதான ஊழலை விசாரிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பாலியல் புகார் உள்ளது. அவரை விசாரிக்க வேண்டிய டிஜிபி மீது குட்கா ஊழல் புகார் உள்ளது. இப்படி, ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகளே பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால்தான் நாம் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம்.


சிறந்த ஊழல்வாதி யார் என்று போட்டி போட்டால் அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார். தமிழக அமைச்சர்கள் ஊழல் பணத்தை மத்திய அரசுக்கு கப்பம் கட்டுகின்றனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதற்காக தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும். 

 

stalin

 

உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினர்களுக்கு 310 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. விதிகள் மீறப்பட்டதாக எதிர்காலத்தில் தமிழத்திற்கு உலக வங்கியின் நிதி உதவி கிடைக்காமல் போகும் அபாயமும் உள்ளது. தமிழக மக்களின் வரிப்பணம் பினாமிகளுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஊழலின் நாயகனாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.தேர்தல் நேரத்தில் மாதம் 5 லட்சம் ரூபாய் வருமானம் என்று அபிடவிட் தாக்கல் செய்துள்ள முதலமைச்சரின் உறவினர்கள் தற்போது வெளிநாடுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். ஊழலுக்குத் துணைபோகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து விட்டோம். 


நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கரன்சி எண்ணிய அனைவரும் கம்பி எண்ணுவார்கள். லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி விட்டனர். ஆனால், அதற்கு தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு நியமித்தால் முதலில் சிறைக்குப் போவது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்