Skip to main content

விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்பு; 2024ஆம் ஆண்டிற்கான 20 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
University of Agriculture released 20 new crop varieties for 2024

கோவை மாவட்டம், காந்திபுரம் அருகே அமைந்துள்ளது பிஎன் புதூர். இப்பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி 2024 ஆம் வருடத்திற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதிகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் மூலம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புதிய ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளடக்கிய புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான 20 புதிய பயிர் ரகங்களை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, ''ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படுகிறது. இதுவரை பல்வேறு பயிர்களில் 905 ரகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. நடப்பாண்டு வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளடக்கிய சுமார் 20 புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கு 20 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில், வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகம் என இரண்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட நான்கு புதிய ரகங்களும், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டோம். அவர்களுக்கு என்றே, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் வகைகளில் பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப்பயிர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், இந்த முறை கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறி பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் சிவப்புப் புளி, தென்னை வகைகளில் புதிய ரகம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய பயிர் ரகங்களை விவசாய பெருமக்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இதையடுத்து பேசிய விவாசயிகள், ''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை நாங்கள் இந்த பயிர் ரகங்களை விளைவிக்க ஆவலுடன் உள்ளோம். தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் ரகங்களை கண்டுப்பிடிக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்வில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.