திருச்சி பீமநகர் பகுதியில் மயங்கி விழுந்து கிடந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் குறித்த விவரங்கள் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பீம நகர் யானைக்கட்டி மைதானம் பகுதியில் கடந்த ஜூலை 18ஆம் தேதி மயங்கிய நிலையில் ஒருவர் விழுந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி 24ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியாததால் காவல்துறை பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இறந்தவருக்கு சுமார் 50 வயதிருக்கலாம். கருப்பான தேகத்துடன் நெற்றியில் காயம் பட்ட தழும்பு மற்றும் இடது காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதற்கான தழும்புகள் உள்ளன. இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால், நீதிமன்ற காவல் நிலையத்தை நேரிலோ அல்லது காவல் நிலையத்தை 0431-2468808, ஆய்வாளர் 9498156969 அல்லது உதவி ஆய்வாளர் 9498105232 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.