Skip to main content

பொதுமக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் நிர்ணயிப்பதா? எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
water



 

பொதுமக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் அறிவிப்பை வாபஸ் பெறுவதோடு, சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி லாபம் கொழிக்கும் ஆலைகள், தண்ணீர் மாஃபியா நிறுவனங்கள், குளிர்பான நிறுவனங்களை கண்காணிக்கும், அவற்றின் சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்தும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

 

 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

 

 

2019 ஜூன் மாதம் முதல், வீடு உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரை எந்த வகையில் எடுத்து பயன்படுத்தினாலும், அதற்காக அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி ஓர் அங்குலம் விட்டம் கொண்ட குழாயில், 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்களுக்கு, ஒரு கன மீட்டருக்கு 2 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இந்த அறிவிப்பு  கண்டிக்கத்தக்கது.
 

 

பொது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான குடிநீரை, இலவசமாக வழங்குவதுதான் மக்கள் நல அரசின் தலையாய பணி. ஆனால், அதனை அரசு முழுமையாக வழங்காத போது, அதற்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துவதுதான் நிலத்தடி நீர். தற்போது அதற்கும் கட்டணம் விதித்து தடை போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இது ஒருவகையில் குடிமக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

 

நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் இந்த திட்டம் என்பது, பெப்சி, கோக், யுனிலிவர், மெக்கன்ஸி ஆகிய பன்னாட்டு பெருங்குழுமங்களின் நிதி ஆதாரத்துடன் செயல்பட்டுவரும் நீர் ஆதாரக்குழு 2030 (WATER RESOURCES GROUP 2030) என்கிற அமைப்பு, இந்திய அரசிடம் அளித்த “தேசிய நீர் ஆதாரத்திட்ட வரைவு ஆய்வு- சீர்திருத்ததுக்கான திசைகாட்டி” என்ற அறிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தான் “தேசிய நீர்க் கொள்கை 2012” என்ற தலைப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

 

 

மனித இனம் உயிர் வாழ்வதற்கும், சுற்றுச் சூழல் அமைப்புகள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் தேவையான குறைந்தபட்ச  தண்ணீரைத் தவிர, மற்ற தண்ணீரெல்லாம் சந்தை பொருளியல் வளமாகப் பேணப்பட வேண்டும் என்கிறது தேசிய நீர்க்கொள்கை-2012. அதன்படி, ஆற்று நீரும், நிலத்தடி நீரும், மழை நீரும் முற்றிலும் தனியார் பெருங்குழுமங்களுக்கு வழங்கப்பட இக்கொள்கை வழிவகுக்கிறது.
 

 

தேவையான குறைந்தபட்சத் தண்ணீரின் அளவு என்ன என்பதை புதிய தேசிய நீர்க்கொள்கை வரையறுக்காத நிலையில் தான், ஒரு கன மீட்டருக்கு 2 ரூபாய் வரை கட்டணத்தை நிர்ணயித்து தற்போது அறிவிப்பு செய்துள்ளது மத்திய நிலத்தடி நீர் ஆணையம்.

 

 

அதோடு, அணை மற்றும் நீர் நிலைகளையெல்லாம் மாநில அரசின் அதிகாரத்திலிருந்து பறித்து, தேசிய அளவில் நீர்நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிறது புதிய தேசிய நீர்க்கொள்கை. அந்த ஆணையம் மூலம் நீர் மேலாண்மை செய்யவும், ஆண்டுதோறும் பயன்படுத்தும் நீருக்கு கட்டணத்தை தீர்மானிக்கவும் வேண்டும் என்கிறது புதிய தேசிய நீர்க் கொள்கை. அதன் ஒரு பகுதி தொடர் நடவடிக்கையாகத் தான், தற்போது மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவும் அமைந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.  
 


 

மனிதர்களுக்கும், சுற்றுச் சூழல் தூய்மைக்கும் தேவையான குறைந்தபட்ச நீர் வழங்கல் கூட, தனியாரின் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என தேசிய நீர்க்கொள்கை வரைவு குறிப்பிடுவதிலிருந்தே, நாட்டின் நீர் வளம் முழுவதும் கார்ப்பரேட் வணிகச் சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது உறுதியாகிறது.

 

 

ஏற்கனவே உலக வங்கியின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மானியத்தை குறைக்கும் நடவடிக்கையும், பொது விநியோகத் திட்டத்தையும் குறைத்திடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இனி நீர்வளமும் அப்படி மாறிவிடுமோ என்ற அச்ச உணர்வு மேலிடுகிறது.
 

 

நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்த கட்டண முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும், வீடுகளில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலன்று.
 

 

நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் முறை என்பது, தேசிய நீர்க் கொள்கை-2012 பரிந்துரைகளில் ஒன்றாகும். அதில் விவசாயத்திற்காக பயன்படுத்தும் நீருக்கும் கட்டணம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே, வருங்காலத்தில் விவசாய பயன்பாட்டு நீருக்கும் கட்டணமுறை அமல்படுத்தப்படும் என்பது உறுதி.
 

 

பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் நிதி ஆதாரத்துடன் செயல்பட்டுவரும் நீர் ஆதாரக்குழு-2030 பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட, தேசிய நீர்க் கொள்கை-2012 கொஞ்சம் கொஞ்சமாக அமுல்படுத்தப்படுமானால், இனிமேல் தண்ணீர் என்பது அரசின் சேவை என்ற தலைப்பில் வராது. அது முற்றிலும் தனியார் மயமாக்கப்பட்டு, அரசு குடிநீர் வழங்கல் என்ற துறையிலிருந்து, வெறும் குடிநீர் வழங்கல் கண்காணிப்புத் துறையாக மாறிவிடும்.
 

 

ஆகவே, பொதுமக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் விதிக்கும் அறிவிப்பை வாபஸ் பெறுவதோடு, சட்டவிரோதமாக தண்ணீரை உறிஞ்சி லாபம் கொழிக்கும் ஆலைகள், தண்ணீர் மாஃபியா நிறுவனங்கள், குளிர்பான நிறுவனங்களை கண்காணிக்கும், அவற்றின் சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்தும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் வர்த்தகமாக்கப்படுவதிலிருந்து சாதாரண குடிமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.